தாய்லாந்தில் பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ பெண் அவமதிப்பு

  தினத்தந்தி
தாய்லாந்தில் பிரபஞ்ச அழகி போட்டியில் மெக்சிகோ பெண் அவமதிப்பு

பாங்காக், 2025-ம் ஆண்டுக்கான மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி வருகிற 21-ந்தேதி தாய்லாந்தில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் பல்வேறு நாட்டு அழகிகள் தலைநகர் பாங்காக்கில் குவிந்து உள்ளனர். அவர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்கள். இந்த நிலையில் அதில் மிஸ் பிரபஞ்ச அழகி போட்டி நிகழ்ச்சி ஒன்று நடந்தது. போட்டியின் - மேற்பார்வையாளர் நவத் இட்சராகிரைசில் பேசிய போது, போட்டியாளர்களில் சிலர் ஏன் விளம்பர படப்பிடிப்பில் கலந்து கொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பினார். மேலும் மெக்சிகோ அழகி பாத்திமா போஷை கூப் பிட்டு விளக்கம் அளிக்குமாறு கேட்டார். அப்போது பாத்திமா போஷ் விளக்கம் அளிக்க முயன்றபோது அவரை முட்டாள் என்று நவத் கூறினார். இதனால் பாத்திமா போஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே அவரை நவத் அமைதியாக இருக்கும்படி கூறினார்.ஆனால் பாத்திமா போஷ் தொடர்ந்து ஆவேசமாக பேசினார். நீங்கள் என்னை ஒரு பெண்ணாகவும், என் நாட்டின் பிரதிநிதியாகவும் மதிக்கவில்லை என்றார். இதையடுத்து மெக்சிகோ அழகியை அவமானப்படுத்தியதாக மற்ற அழகிகளும் கோபம் அடைந்தனர். தான் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து பாத்திமா போஷ் அந்த அறையை விட்டு வெளியேறினார். அவருக்கு ஆதரவாக பல நாட்டு அழகிகளும் வெளிநடப்பு செய்தனர். தற்போதைய மிஸ் பிரபஞ்ச அழகி விக்டோரியாவும் வெளிநடப்பு செய்தார்.இதை பார்த்த போட்டி அமைப்பாளர் நவத் கூறும் போது, அழகிகள் போட்டியிட விரும்பினால் இங்கே உட்கார வேண்டும் என்று மிரட்டினார். ஆனாலும் பல அழகிகள் வெளியேறினார்கள். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. அழகிகளின் எதிர்ப்பு காரணமாக நவத் மன்னிப்பு கேட்டார். இதற்கிடையே மிஸ் யுனிவர்ஸ்(பிரபஞ்ச) அமைப்பு கூறும்போது, அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மற்றும் மரியாதைக்குரிய தொழில்முறை சூழலை உறுதி செய்ய ஒரு மூத்த நிர்வாகி தாய்லாந்திற்கு அனுப்பப்படுவார் என்று தெரிவித்தது.

மூலக்கதை