இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்

  தினத்தந்தி
இரவுப்பணி சுமை என கருதி... நோயாளிகளை ஊசி போட்டு கொலை செய்த நர்ஸ்; ஜெர்மனியில் கொடூரம்

பெர்லின், ஜெர்மனியில் ஊர்செலன் நகரில் உள்ள மருத்துவமனையில் ஆண் நர்சாக 2020-ம் ஆண்டு பணியில் சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய பணி காலத்தில், நோயாளிகளை பராமரிப்பதற்கு பதிலாக அவர்களை ஊசி போட்டு கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளார். இந்த அதிர்ச்சி சம்பவம் 2023-ம் ஆண்டு டிசம்பர் முதல் 2024-ம் ஆண்டு மே வரையில் நடந்துள்ளது. அப்போது, இதுபோன்று 10 நோயாளிகளை கொலை செய்துள்ளார். 27 பேரை கொல்ல முயற்சியும் செய்துள்ளார். இரவு நேர பணியின்போது, பணி சுமை கூடுதலாக இருக்கிறது என உணர்ந்த அவர், இந்த முடிவை எடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரணை ஆச்சன் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அதில், 15 ஆண்டுகளுக்கு குறையாமல் வெளியே வர முடியாதபடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. எனினும், அவர் மேல்முறையீடு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், உயிரிழந்தவர்களின் உடல்களை வெளியே எடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், மீண்டும் அவருக்கு எதிராக விசாரணை நடக்கும் என தெரிகிறது. 2019-ம் ஆண்டில் நீல்ஸ் ஹோஜெல் என்ற முன்னாள் ஆண் நர்ஸ் ஒருவர் வடக்கு ஜெர்மனியில் 2 மருத்துவமனைகளில் வேலை செய்தபோது, 85 நோயாளிகளை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளானார். 1999-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் நோயாளிகளுக்கு அதிக டோஸ் மருந்துகளை கொடுத்ததில் பலர் உயிரிழந்தனர். ஜெர்மனியின் நவீன வரலாற்றில் கொடூர கொலைக்காரர் இவர் என நம்பப்படுகிறது. இந்த நிலையில், 20 ஆண்டுகள் கழித்து மற்றொரு கொடூர வழக்கு தெரிய வந்துள்ளது.

மூலக்கதை