காசாவிடம் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

  தினத்தந்தி
காசாவிடம் 15 பாலஸ்தீனியர்களின் உடல்களை ஒப்படைத்தது இஸ்ரேல்

டெய்ர் அல்-பலா, இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. இதற்கு பதிலடியாக, காசாவை இலக்காக கொண்டு இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. காசா சுகாதார அதிகாரிகளின் தகவலின்படி, ஓராண்டுக்கு மேலாக நடந்த மோதலில் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். லட்சக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர். இந்நிலையில், போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி இஸ்ரேலிடம் இருந்து 15 பாலஸ்தீனியர்களின் உடல்கள் பெறப்பட்டு உள்ளன என காசாவின் கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்துவமனையின் அதிகாரிகள் இன்று தெரிவித்தனர். அமெரிக்க மத்தியஸ்த பேச்சுவார்த்தையின் பலனாக, கடந்த அக்டோபர் 10-ந்தேதி தொடங்கிய போர்நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இருதரப்பிலும் பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதன்படி, 21 பணய கைதிகளை ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலிடம் இன்று ஒப்படைத்து உள்ளது. சில நாட்களுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில், ஒன்று முதல் 3 உடல்களை காசாவில் உள்ள பயங்கரவாதிகள் ஒப்படைத்து வருகின்றனர். எனினும், அவற்றில் சில, பணய கைதிகளின் உடல்கள் இல்லை என இஸ்ரேல் கூறி வருகிறது. ஒவ்வொரு பணய கைதி விடுதலையாகும்போது, 15 பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுவித்து வருகிறது.

மூலக்கதை