இந்தியன் ஆயில் லாபம் 25% அதிகரிப்பு
பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐ.ஓ.சி.) முதல் காலாண்டு லாபம் 25 சதவீதம் அதிகரித்தது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு 2016-17-ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் ஐ.ஓ.சி. நிறுவனம் ரூ.1,14,200.24 கோடி வருவாய் ஈட்டியது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் ஈட்டிய வருவாயான ரூ.1,14,200.24 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 6 சதவீதம் குறைவாகும்.
பொது விநியோக திட்டத்தின் கீழ் மண்ணெண்ணெய் விற்பனை செய்த வகையில் நிறுவனத்துக்கு ரூ.1,331.69 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது.
நிகர லாபம் ரூ.6,590.83 கோடியிலிருந்து 25 சதவீதம் அதிகரித்து ரூ.8,268.98 கோடியாக இருந்தது.
ஐ.ஓ.சி. இயக்குநர்கள் குழு, 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தெரிவித்துள்ளது.