வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் துறை... கிடிக்கிப்பிடி; பண பரிமாற்றத்தை தெரிவிக்க உத்தரவு

தினமலர்  தினமலர்
வங்கிகளுக்கு மாவட்ட தேர்தல் துறை... கிடிக்கிப்பிடி; பண பரிமாற்றத்தை தெரிவிக்க உத்தரவு

புதுச்சேரி, புதுச்சேரி லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்த : விதிகள் அமலுக்கு வந்தள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர்கள், கட்சிகள் வங்கி கணக்கை கையாளுதல், கண்காணித்தல் மற்றும் பண பரிமாற்றங்கள் தொடர்பான வங்கிகள், நிதி நிறுவனங்களுடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் உதவி கலெக்டர் யஷ்வந்த் மீனா, மாவட்ட துணை தேர்தல் அதிகாரி வினயராஜ், செலவின கண்காணிப்பு நோடல் அதிகாரி ஜெகநாதன் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து வங்கி, நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மாவட்ட தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், கூறுகையில், 'தேர்தல் செலவினங்களை கண்காணிக்க வசதியாக ஒவ்வொரு வேட்பாளருக்கும், தேர்தல் செலவினங்களுக்காக பிரத்யேக தனி வங்கி கணக்கு துவங்க வேண்டும்.

இந்த கணக்கு வேட்பாளர் தனது வேட்புமனு தாக்கல் செய்யும் தேதிக்கு குறைந்தது ஒரு நாளுக்கு முன்னதாக தொடங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகள் அல்லது தபால் நிலையங்கள் உள்ளிட்ட எந்த வங்கிகளிலும் கணக்கு துவங்கலாம்.

வேட்பாளர் வங்கி கணக்கு துவங்க விரைவான சேவை வழங்க அனைத்து வங்கிகள், தபால் நிலையங்களில் பித்யேக கவுண்டர்கள் திறப்பதை உறுதி செய்ய வேண்டும். தேர்தல் காலத்தில் வேட்பாளர் கணக்கில் பணம் எடுப்பது, டெபாசிட் செய்வதை முன்னுரிமை அடிப்படையில் அனுமதிக்க வேண்டும்.

வேட்பாளர் பெயரில் அல்லது அவரது தேர்தல் முகவரின் கூட்டு பெயரில் தேர்தல் செலவினங்களுக்கான வங்கி கணக்கு துவக்கலாம். வேட்பாளர் தேர்தல் முகவராக இல்லாவிடில், வேட்பாளரின் குடும்ப உறுப்பினர், வேறு எந்த நபருடனும் கூட்டு பெயரில் வங்கி கணக்கு தொடங்கப்பட கூடாது.

வங்கி கணக்கை மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் தொடங்கலாம். கூட்டுறவு வங்கி, தபால் நிலையங்கள் உள்ளிட்ட எந்த வங்கிகளிலும் கணக்கு தொடங்கலாம். தேர்தல் காலத்தில் வங்கிகள் மூலம் சந்தேகத்திடமான பண பரிவர்த்தனைகள் தொடர்பாக தகவல்களை மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு தெரியப்படுத்த வேண்டும்.

கடந்த 2 மாதங்களாக ஒரு லட்சத்திற்கு அதிகமான பண பரிவர்த்தனைகள் நிகழாத நிலையில், திடீரென வழக்கத்திற்கு மாறாக அல்லது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் ரூ. 1 லட்சம் அதற்கு மேல் பணம் வங்கியில் செலுத்துவது அல்லது எடுப்பது இருந்தால் தெரிவிக்க வேண்டும்.

ஒரு வங்கி கணக்கில் இருந்து ஒரு மாவட்டம், தொகுதியில் உள்ள பல நபர் வங்கி கணக்குகளுக்கு ஆர்.டி.ஜி.எஸ்., மூலம் வழக்கத்திற்கு மாறாக பணம் பரிமாற்றம் செய்வது, வேட்பாளர் தாக்கல் செய்துள்ள தனது பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள தனது மனைவி, கணவர், வேட்பாளரை சார்ந்தவர்களின் வங்கி கணக்கில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக பணம் செலுத்துவது அல்லது எடுப்பது குறித்து தெரிவிக்க வேண்டும்.

ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணத்தை வங்கியில் டெபாசிட் அல்லது எடுத்தாலும், வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க பயன்படுத்தும் நோக்கத்தில் சந்தேகத்திடமாக பணம் பரிவர்த்தனை இருந்தாலும் தெரிவிக்க வேண்டும்.

அதுபோல் ரூ. 10 லட்சத்திற்கு மேல் பணம் செலுத்துதல், எடுத்து இருந்தால், வருமான வரிச்சட்டத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதிற்கு, வருமான வரித்துறை நோடல் அதிகாரிகளுக்கு தகவல் அனுப்ப வேண்டும்.

தேர்தல் சமயத்தில் ஏ.டி.எம்., இயந்திரங்களில் பணம் நிரப்ப எடுத்து செல்லும்போது, வாடகை வாகனத்தில் அந்த வங்கியில் பணத்தை தவிர மூன்றாம் தரப்பு ஏஜென்சி, தனி நபர் பணத்தை எடுத்து செல்ல கூடாது. ஏ.டி.எம். பணம் நிரப்பும் வாகனத்தில், வங்கியால் அளிக்கப்பட்ட தொகை விபரங்கள், வங்கி கடிதம், ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். பணியாளர்கள், ஏஜென்சியால் வழங்கப்பட்ட அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதுச்சேரி, புதுச்சேரி லோக்சபா தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்த : விதிகள் அமலுக்கு வந்தள்ளது. அதன் ஒரு பகுதியாக, வேட்பாளர்கள், கட்சிகள் வங்கி கணக்கை கையாளுதல்,

மூலக்கதை