கூடுதல் நிதி சேவைகளில் அன்னிய முதலீட்டிற்கு அனுமதி
மும்பை;ரிசர்வ் வங்கி, மேலும் பல நிதிச் சேவைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால், நிதிச் சேவைகள் துறையில், அன்னிய நேரடி முதலீடுகள் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வங்கி சாரா நிதி நிறுவனங்கள், தற்போது, மத்திய அரசு, ரிசர்வ் வங்கி ஆகியவற்றின் அனுமதியின்றி, 18 வகையான நிதிச் சேவைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடுகளை திரட்டிக் கொள்ளலாம். அவற்றில், நிதி ஆலோசனை, பங்குத் தரகு, வணிக வங்கி நடைமுறைகள், நிதி நிர்வாகம் உள்ளிட்ட சேவைகள் அடங்கும்.இவற்றுடன், தற்போது மேலும் பல நிதிச் சேவைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதிக்கப்பட்டு உள்ளது.
இது குறித்து, ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:மத்திய அரசுடன் மேற்கொண்ட ஆலோசனையை அடுத்து, வங்கி சாரா நிதி நிறுவனங்களின் கீழ், மேலும் பல நிதிச் சேவைகளில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இச்சேவைகள், ரிசர்வ் வங்கி, ‘செபி, இரிடா, பி.எப்.ஆர்.டி., – என்.சி.பி., உள்ளிட்ட நிதித் துறை அமைப்புகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளவையாகும். கட்டுப்பாட்டு அமைப்புகளின் விதிமுறைகளின்படி, அனுமதிக்கப்பட்டுள்ள நிதிச் சேவைகளில், அன்னிய நேரடி முதலீட்டை திரட்டிக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.