முதல்முறையாக சிவப்பு அட்டை எச்சரிக்கையால் வெளியேற்றப்பட்ட ரொனால்டோ

  தினத்தந்தி
முதல்முறையாக சிவப்பு அட்டை எச்சரிக்கையால் வெளியேற்றப்பட்ட ரொனால்டோ

டப்ளின், 23-வது ‘பிபா’ உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ நாடுகளில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 48 அணிகளில் போட்டியை நடத்தும் நாடுகளை தவிர்த்து மற்ற அணிகள் தகுதி சுற்று மூலமே தேர்வாகின்றன. கண்டங்கள் வாரியாக பல்வேறு நாடுகளில் நடக்கும் தகுதி சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி யுள்ளது. ஐரோப்பிய கண்டத்துக்கான தகுதி சுற்றில் 54 அணிகள் 12 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. இதில் ‘எப்’ பிரிவில் இடம் பெற்றுள்ள போர்ச்சுகல் அணி டப்ளினில் நடந்த ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் அயர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. அயர்லாந்தின் டிரோய் பரோட் இரட்டை கோல் (17 மற்றும் 45-வது நிமிடம்) அடித்தார். பிற்பாதியில் 61-வது நிமிடத்தில் பந்தை எதிர்நோக்கி நின்ற போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானா ரொனால்டோ, திடீரென அருகில் இருந்த அயர்லாந்து வீரர் டாரா ஒ ஷியாவை முழங்கையால் இடித்து தள்ளினார். இதில் ஒஷியா நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து முதலில் மஞ்சள் அட்டை காண்பித்த நடுவர் பிறகு வீடியோ காட்சியை ஆராய்ந்த பிறகு அதை சிவப்பு அட்டையாக மாற்றி, ரொனால்டோவை வெளியேற்றினார். 40 வயதான ரொனால்டோ இதுவரை 226 சர்வதேச ஆட்டங்களில் ஆடி 143 கோல்கள் போட்டு நம்பர் 1 இடத்தில் இருக்கிறார். தனது 22 ஆண்டு கால சர்வதேச கால்பந்து வாழ்க்கையில் ரொனால்டோ சிவப்பு அட்டை பெற்றிருப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் அவர் போர்ச்சுகல் அணிக்குரிய தகுதி சுற்றின் கடைசி லீக்கில் (16-ந்தேதி அர்மேனியாவுக்கு எதிராக) விளையாட முடியாது. ரொனால்டோவின் நடவடிக்கை மோசமாக இருப்பதால் இது குறித்து சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி விசாரணை நடத்துகிறது. குறைந்தது அவருக்கு 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படவாய்ப்புள்ளது. எனவே அடுத்த ஆண்டு நடக்கும் உலகக் கோப்பை போட்டிக்கு போர்ச்சுகல் தகுதி பெறும் பட்சத்தில், தொடக்க ஆட்டங்களை தவற விடும் நிலைமைக்கு அவர் தள்ளப்பட்டுள்ளார்.

மூலக்கதை