ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி : பேட்ஸ்மேன்களுக்கு சூர்யகுமார் பாராட்டு

  தினத்தந்தி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றி : பேட்ஸ்மேன்களுக்கு சூர்யகுமார் பாராட்டு

கோல்டுகோஸ்ட், ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஆட்டம் மழையால் பாதியில் ரத்தானது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவும், 3-வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 4-வது டி20 போட்டி கோல்டுகோஸ்டில் உள்ள கரரா ஓவல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலியா முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. இதன்படி சுப்மன் கில்லும், அபிஷேக் ஷர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். நேர்த்தியாக ஆடிய இவர்களை ‘பவர்-பிேள’ வரை அசைக்க முடியவில்லை. முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் (6.4 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா வீசிய பந்தை அபிஷேக் ஷர்மா (28 ரன், 21 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஷிவம் துபே 22 ரன்னில் வெளியேறினார். 14 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது 180 ரன்களை நெருங்கும் என கணிக்கப்பட்டது. ஆனால் சுப்மன் கில் 46 ரன்களிலும் (39 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), சூர்யகுமார் யாதவ் 20 ரன்னிலும் (10 பந்து, 2 சிக்சர்) ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் அக்‌ஷர் பட்டேல் (21 ரன், 11 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) கணிசமான பங்களிப்பை அளித்து 160 ரன்களை தாண்ட வைத்தார். 20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்டுக்கு 167 ரன்கள் சேர்த்தது. பின்னர் 168 ரன் இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ ஷார்ட் (25 ரன், 19 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) எல்.பி.டபிள்யூ. ஆனார். அடுத்து வந்த ஜோஷ் இங்லிசும் (12 ரன்) கிளீன் போல்டானார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான மிட்செல் மார்சை (30 ரன்), புயல்வேக பேட்ஸ்மேன்கள் டிம் டேவிட் (14 ரன்), மேக்ஸ்வெல் (2 ரன்) வீழ்ந்ததும் ஆட்டம் முழுமையாக இந்தியா பக்கம் திரும்பியது. அந்த அணி 18.2 ஓவர்களில் 119 ரன்னில் சுருண்டது. சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவின் 2-வது மோசமான ஸ்கோர் இதுவாகும். இதனால் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டும், அக்‌ஷர் பட்டேல், ஷிவம் துபே தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர். அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை (சனிக்கிழமை) பிரிஸ்பேனில் நடக்கிறது.வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறுகையில், ‘எல்லா சிறப்பும் எங்களது பேட்டர்களையே சாரும். குறிப்பாக சுப்மன் கில், அபிஷேக் ஷர்மா ‘பவர்-பிளே’யில் மிகவும் சாதுர்யமாக ஆடினர். இது 200-220 ரன்களுக்குரிய ஆடுகளம் அல்ல என்பது அவர்களுக்கு தெரியும். பேட்ஸ்மேன்களிடம் இருந்து முழுமையான ஒரு கூட்டு முயற்சி வெளிப்பட்டது. பனியின் தாக்கம் ஓரளவு இருந்ததால், அதற்கு ஏற்ப பவுலர்கள் தங்களை சீக்கிரமாக மாற்றிக் கொள்ள வேண்டி இருந்தது. நமது பவுலர்கள் பந்து வீசிய விதம் அற்புதம். ஆல்-ரவுண்டர்கள் ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் 2-3 ஓவர்கள் வீசுவது எப்போதும் சிறப்பானது. இந்த கூட்டணி தான் எங்களுக்கு சரியாக பொருந்துகிறது’ என்றார். ஆஸ்திரேலிய கேப்டன் மிட்செல் மார்ஷ் கூறுகையில், ‘167 ரன்கள் எடுக்கக்கூடிய இலக்கு என்றே நினைத்தேன். ஆனால் ஆடுகளம் பேட்டிங்குக்கு சவாலாக இருந்தது. இது போன்ற சூழலில் ஒரு சில நல்ல பார்ட்னர்ஷிப் அவசியம். அதை செய்ய தவறி விட்டோம்’ என்றார்.

மூலக்கதை