“நாயகன்” படத்தின் ரீ-ரிலீஸ்க்கு தடைக்கோரி வழக்கு

  தினத்தந்தி
“நாயகன்” படத்தின் ரீரிலீஸ்க்கு தடைக்கோரி வழக்கு

கமல்ஹாசன் நடித்த நாயகன் திரைப்படம் 1987ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தை மணி ரத்னம் இயக்கியிருந்தார். படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த படத்தின் மூலம் நடிகை சரண்யா அறிமுகமானார். மேலும் ஜனகராஜ், கார்த்திகா, நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, விஜயன், எம்.வி. வாசுதேவ ராவ், டாரா, ராஜா கிருஷ்ணமூர்த்தி, டின்னு ஆனந்த் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ்நாட்டில் 214 நாட்கள் ஓடியது. நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவான ‘நாயகன்’ திரைப்படம் இன்று ரீ-ரிலீஸானது. இந்நிலையில் எஸ் ஆர் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் உரிமையாளர் எஸ் ஆர் ராஜன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில்தொடரந்துள்ள வழக்கில், நாயகன் திரைப்படத்தை தனது நிறுவனம், ஏடிஎம் புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்திடம் இருந்து படத்தினை வெளியிடும் உரிமையை கடந்த 2023 அன்று பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனை மறைத்து வி.எஸ். பிலிம் இண்டர்நேஷனல் என்ற நிறுவனத்தின் மூலம் தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இன்று ‘நாயகன்’ திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளதாகவும். இது முறைகேடான நடவடிக்கை என தெரிவித்துள்ளார். எனவே ‘நாயகன்’ திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் இன்று வசூலான தொகையை நீதிமன்றத்தில் கட்ட உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதி முன்பு மனுதாரர் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது. மனுவை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மூலக்கதை