முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும் - தோல்வி குறித்து ரோஸ்டன் சேஸ் கருத்து

  தினத்தந்தி
முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும்  தோல்வி குறித்து ரோஸ்டன் சேஸ் கருத்து

அகமதாபாத், ரோஸ்டன் சேஸ் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்தது. இந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி வரும் 10ம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ரோஸ்டன் சேஸ் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்யும் போது 160 ரன்னில் (162 ரன்) ஆட்டமிழந்தால் அதில் இருந்து மீண்டு வருவது கடினம். பேட்டிங்கில் எங்களிடம் இருந்து எதிர்பார்த்த செயல்திறன் வெளிப்படவில்லை.குறிப்பாக இந்தியாவில் நன்றாக பேட்டிங் செய்வதுடன், முதல் இன்னிங்சில் பெரிய ஸ்கோரை எடுக்க வேண்டும். நாங்கள் முதலில் பேட்டிங் செய்ய எடுத்த முடிவில் தவறில்லை. நாங்கள் பேட்டிங்கில் ஒரு 50 ரன் பார்ட்னர்ஷிப் கூட அமைக்கவில்லை. பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க வேண்டியது முக்கியமானதாகும். இவ்வாறு அவர் கூறினார்.

மூலக்கதை