காமன்வெல்த் மகளிர் டி20: அரையிறுதியில் இந்தியா

தினகரன்  தினகரன்
காமன்வெல்த் மகளிர் டி20: அரையிறுதியில் இந்தியா

பர்மிங்காம்: காமன்வெல்த் மகளிர் டி20 போட்டியில் பார்படாசுக்கு எதிராக 100 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற  இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியது. ஏ பிரிவில் உள்ள இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் பார்படாஸ்  அணியை எதிர்த்து விளையாடியது. டாஸ் வென்ற பார்படாஸ் முதலில் பந்துவீச, இந்தியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் குவித்தது. ஷபாலி வர்மா 43 ரன் (26 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜெமீமா ரோட்ரிகியூஸ் 56* ரன் (46 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்), தீப்தி சர்மா 34* ரன் விளாசினர். பார்படாஸ் தரப்பில் ஹேலி மேத்யூஸ், ஷகெரா செல்மன், ஷனிகா புரூஸ் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களம் கண்ட பார்படாஸ்  20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 62 ரன் மட்டுமே எடுத்து 100 ரன் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. அதிகபட்சமாக கிசோனா நைட் 16 ரன் எடுத்தார். இந்திய பந்துவீச்சில் ரேணுகா சிங் 4 ஓவரில் 10 ரன் மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்தியா 3லீக் ஆட்டங்களில் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று ஏ பிரிவில் 2வது இடம் பிடித்து அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. பி பிரிவில் முதலிடம் பிடிக்கும் இங்கிலாந்து அல்லது நியூசிலாந்து அணியுடன் நாளை அரையிறுதியில்  இந்திய மகளிர் மோத உள்ளனர். ஏ பிரிவில் ஹாட்ரிக் வெற்றியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த ஆஸ்திரேலியா, பி பிரிவில் 2வது இடம் பிடிக்கும் அணியுடன் அரையிறுதியில் விளையாடும்.தென் ஆப்ரிக்கா ஆறுதல்: பி பிரிவில் இடம் பெற்றிருந்த தென் ஆப்ரிக்க அணி தனது முதல் 2 லீக் ஆட்டங்களிலும் தோல்வியைத் தழுவிய நிலையில், நேற்று இலங்கை அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீச, இலங்கை 17.1 ஓவரில் 46 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் சமாரி அத்தப்பட்டு 15 ரன் எடுக்க, மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர் (3 பேர் டக் அவுட்). அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 6.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 49 ரன் எடுத்து ஆறுதல் வெற்றியை வசப்படுத்தியது. போஷ் 20, பிரிட்ஸ் 21 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பி பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.

மூலக்கதை