மன்னிப்பு கேட்டதா டிஸ்னி : ரூ.2500 கோடி ஆபரை ஏற்றாரா 'ஜாக் ஸ்பேரோ' ஜானி டெப்

தினமலர்  தினமலர்
மன்னிப்பு கேட்டதா டிஸ்னி : ரூ.2500 கோடி ஆபரை ஏற்றாரா ஜாக் ஸ்பேரோ ஜானி டெப்

கடற் கொள்ளையர்களை கொண்டு உருவாக்கப்பட்ட பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் படங்கள் உலக புகழ்பெற்றவை. ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த பேண்டசி படம். இந்த படத்தின் நாயகன் ஜாக் ஸ்பேரோவாக நடித்தவர் ஜானி டெப். காமெடி கலந்த ஆக்ஷன்தான் இவரது ஸ்டைல். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உலகம் முழுக்க ஜானி டெப்புக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இதுவரை வெளிவந்த 5 பாகத்திலும் ஜானி டெப் தான் நாயகன். இப்போது 6வது பாகம் தயாராக உள்ளது. இந்நிலையில், 2018 ஆம் ஆண்டு ஜானி டெப்பின் முன்னாள் மனைவி ஆம்பர் ஹெர்ட் எழுதிய ஒரு கட்டுரையில் ஜானி டெப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், குடித்து விட்டு இயற்கைக்கு மாறாக உறவு கொண்டதாகவும் எழுதியிருந்தார், இந்தக் கட்டுரை வெளியான சில நாட்களில் பைரேட்ஸ் ஆப் தி கரிபியன் படத்தின் 6வது பாகத்திலிருந்து ஜானி டெப்பை நீக்கியது டிஷ்னி நிறுவனம்.

அதன்பிறகு மனைவி மீது ஜானி டெப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் ஜானி டெப் குற்றமற்றவர் என்று தீர்ப்பளித்து, ஜானி டெப்பிற்கு 15 மில்லியன் அமெரிக்க டாலர்கள் தொகையை இழப்பீடாக வழங்கும்படி ஆம்பர் ஹெர்ட்டுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் இழந்த இமேஜை மீண்டும் பெற்றார் ஜானி டெப்.

இந்த நிலையில் டிஷ்னி நிறுவனம் ஜானி டெப்புக்கு மன்னிப்பு கடிதம் வழங்கி உள்ளதாகவும், அதோடு 6ம் பாகத்தில் நடிக்க அழைத்திருப்பதுடன் அதற்காக 301 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 2500 கோடி) சம்பளமாக தருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால் இதை ஜானி டெப் தரப்பில் மறுத்துள்ளனர். அந்த செய்தி அடிப்படை ஆதாரமற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜானி - ஆம்பர் ஹெர்ட் வழக்கு நடந்த போது, "இனி 300 மில்லியன் டாலர்கள் கொடுத்தால் கூட 'பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்' படத்தில் நடிக்க மாட்டேன்" என ஜானி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை