தமிழ் சினிமாவில் முதன் முறையாக உருவாகும் ஓநாய் மனிதனின் கதை

தினமலர்  தினமலர்
தமிழ் சினிமாவில் முதன் முறையாக உருவாகும் ஓநாய் மனிதனின் கதை

குட் ஹோப் பிக்சர்ஸ் சார்பில் கோகுல கிருஷ்ணன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கெஸ்ட் ; சாப்டர்-2'. ரங்கா புவனேஷ்வர் இயக்கியுள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் குமார், விது பாலாஜி ஆகியோர் நடிக்க கதாநாயகியாக சாக்ஷி அகர்வாலும் முக்கிய வேடத்தில் ஜாங்கிரி மதுமிதாவும் நடித்துள்ளனர். அனிமல் திரில்லர் என்கிற ஜானரில் இந்தப் படம் உருவாகியுள்ளது. ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்ய, அன்வர் கான் தாரிக் இசையமைக்கிறார்.

படம் பற்றி இயக்குநர் ரங்கா புவனேஷ்வர் கூறியதாவது: இன்றைக்கு இதுபோன்ற வித்தியாசமான திரில்லர் படங்களுக்கு ரசிகர்களிடம் அதிக வரவேற்பு இருக்கிறது. நல்ல வியாபாரத்திற்கான அம்சங்களும் இருக்கின்றன. அதுமட்டுமல்ல இந்த ஓநாய் மனிதன் என்கிற கதைக்களம் இந்திய சினிமாவிலேயே முதல்முறையாக இப்போது தான் முழுமையாகக் கையாளப்படுகிறது.

இதற்கு முன்னதாக இந்தியில் எழுபதுகளின் காலகட்டத்தில் ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தாலும் அவற்றில் ஓநாய் மனிதன் என்கிற உருவத்தை அந்த காலகட்டத்திற்கு ஏற்ப சாதாரணமாகவே கையாண்டு இருந்தார்கள். ஆனால் இந்த படத்தில் ஓநாய் மனிதன் உருவாக்கத்தில் விஎப்எஸ் தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்கு வகித்துள்ளது.

அதிலும் இங்கே இந்தியாவில் இந்த ஓநாய் மனிதன் சம்பந்தப்பட்ட காட்சிகளுக்கு விஎப்எக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியில்லை என்பதால் ஹாங்காங்கில் வைத்து இந்த படத்தின் விஎப்எக்ஸ் காட்சிகளை வடிவமைத்துள்ளோம். கொடைக்கானல் மற்றும் திருவனந்தபுரம் பகுதியில் உள்ள அடர்ந்த காடு ஆகியவற்றில் கிட்டத்தட்ட 45 நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். என்றார்.

மூலக்கதை