கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை : சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம்

தினமலர்  தினமலர்
கனவாய் மறைந்து போன கவர்ச்சி தாரகை : சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம்

தனது கண்களாலும் கவர்ச்சியாலும் திரையுலகில் தடம் பதித்து கனவாய் மறைந்த கவர்ச்சித் தாரகை சில்க் ஸ்மிதா. சினிமா உலகிற்காக சில்க்காக, நிஜ வாழ்வில் விஜயலட்சுமியாக வாழ்ந்து சோகங்களையும், ஏமாற்றங்களையும் சந்தித்து மறைந்து போன சில்க் ஸ்மிதாவின் 62வது பிறந்ததினம் இன்று. அவரை பற்றிய நினைவுகள்....

சில்க் ஸ்மிதாவின் ஆரம்பகால வாழ்க்கை சோகத்தின் சுவடுகளை மட்டுமே சுமந்ததாய் இருந்தது. விஜயலட்சுமி என்ற இயற்பெயரை கொண்ட இவர், ஆந்திர மாநிலத்திலுள்ள ஏலூரு என்ற ஊரில் ஒரு ஏழ்மையான குடும்பத்தில் 1960 ஆம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி பிறந்தார்.

வறுமையின் காரணத்தால் இவருடைய பள்ளிக் கல்வி நான்காம் வகுப்போடு நின்று விட, குடும்பத்தினர் இவருக்கு சிறுவயதிலேயே திருமணமும் முடித்து வைத்தனர். திருமண வாழ்க்கையும் இவருக்கு பெரிதாக மகிழ்ச்சியை தரவில்லை. வேலை தேடி சென்னைக்கு வந்த இவர் திரைப்படத் துறையில் ஒப்பனையாளராக தனது முதல் பணியை ஆரம்பித்தார்.

மறைந்த நடிகர் வினுசக்கரவர்த்தியின் உதவியால் 1979ம் ஆண்டு வெளிவந்த "வண்டிச்சக்கரம்" என்ற திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண் கதாபாத்திரம் ஏற்று நடித்தார். ஏற்று நடித்த முதல் கதாபாத்திரமே இவருக்கு பெரும் வரவேற்ப்பை பெற்று தந்தது. அதிலிருந்து விஜயலட்சுமி என்ற இவரது இயற்பெயர் சில்க் ஸ்மிதா என மாறியது.

இதனைத் தொடர்ந்து இவர் நடித்த அனைத்து கதாபாத்திரங்களும், கவர்ச்சி கதாபாத்திரங்களாகவே அமைந்தது. இவருடைய கவர்ச்சியான தோற்றம், நடன அசைவு, கிரங்க வைக்கும் கண்கள் தமிழ் ரசிகர்கள் நெஞ்சங்களில் கனவுக்கன்னியாக வலம் வரச் செய்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ஏறக்குறைய 450க்கும் மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

நடிகைகளே பொறாமைப்படும் அளவுக்கு தனது கவர்ச்சியாலும், நடிப்பாலும் கவர்ந்தவர் சில்க். சினிமாவில் ஒப்பற்ற கனவுக்கன்னியாக வலம் வந்த சில்க் ஸ்மிதாவின் நிஜ வாழ்க்கையில் நிறைய துன்பங்களும், ஏமாற்றமும் மட்டுமே அதிகம் இருந்தது.

1996ஆம் ஆண்டு செப்டம்பர் 23 அன்று தனது வீட்டில் தூக்கிட்டு இறந்து போனார். அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக இன்றளவும் பேசப்படுகிறது. இவரின் திரை வாழ்க்கையை சினிமாவாக எடுத்து பலர் கல்லாக்கட்டினர். அவர் மறைந்து இப்போது வரை 26 ஆண்டுகளை கடந்துவிட்டது. ஆனால் அவருக்கான இடம் மட்டும் சினிமாவில் இப்போதும் வெற்றிடம் தான்.

மூலக்கதை