ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், பெல் நிறுவனம் இணைந்து தனியார் ரயில் சேவை துவக்க திட்டம்
புதுடில்லிஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்திய ரயில்வே சுற்றுலா மற்றும் உணவு கழகம், ‘பெல்’ எனும், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, தனியார் ரயில்களை இயக்க திட்டமிட்டு வருகிறது.
இது குறித்து இத்துறை சார்ந்த அதிகாரி தெரிவித்ததாவது:மத்திய ரயில்வே துறை, தனியார் ரயில்களை இயக்கும் திட்டத்தில் உள்ளது. இந்நிலையில், ஐ.ஆர்.சி.டி.சி., நிறுவனம், பெல் நிறுவனத்துடன் இணைந்து, தனியாக பயணியர் ரயில் வணிகத்தை துவக்க திட்டமிட்டு வருகிறது. இதற்கென, தனியாக சிறப்பு நிறுவனம் ஒன்றை ஏற்படுத்துவது குறித்தும் பேச்சு நடைபெற்று வருகிறது.
பெல் நிறுவனம், தனியார் ரயில்வே சேவைக்கு தேவைப்படும் பணத்தை முதலீடு செய்ய உள்ளது. ஐ.ஆர்.சி.டி.சி., நடைமுறை தேவைகளை கவனித்து கொள்ளும்.கடந்த ஆண்டு நவம்பரில், 13 பெரிய நிறுவனங்கள் தனியார் ரயில்களை இயக்க தேர்வு செய்யப்பட்டு உள்ளன. ‘ஐ.ஆர்.சி.டி.சி., – ஜி.எம்.ஆர்., – எல் அண்டு டி இன்ப்ராஸ்ட்ரக்சர், பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ், வெல்ஸ்பன் என்டர்பிரைசஸ்’ போன்ற நிறுவனங்கள் இந்த பட்டியலில் அடக்கம். இவ்வாறு அவர் கூறினார்.