‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடிதிரட்டி சாதனை

தினமலர்  தினமலர்
‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்கள் ரூ. 3.11 லட்சம் கோடிதிரட்டி சாதனை

புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. இதற்கு முந்தைய ஆண்டில், 85 ஆயிரம் கோடி ரூபாய் திரட்டப்பட்டிருந்த நிலையில், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து, ‘ஓரியோஸ் வெஞ்சர்ஸ் பார்ட்னர்ஸ்’ நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுஉள்ளதாவது:கடந்த ஆண்டில் மட்டும், இந்தியாவில் 46 யுனிகார்ன் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. இதைஅடுத்து, இந்தியாவில் உள்ள மொத்த யுனிகார்ன் நிறுவனங்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.

ஒரு பில்லியன் டாலர், அதாவது 7,400 கோடி ரூபாய் மதிப்பு கொண்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் யுனிகார்ன் அந்தஸ்து பெற்றவையாக கருதப்படும்.உலகளவில் அதிக யுனிகார்ன் நிறுவனங்கள் கொண்ட நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது.
முதல் இடத்தில் அமெரிக்கா 487 நிறுவனங்களுடனும், சீனா 301 நிறுவனங்களுடனும் உள்ளன. பிரிட்டனில் 39 நிறுவனங்களே உள்ளன.இந்தியாவில் மொத்தம் 60 ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ளன.உலகில் உருவாகும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 13ல் ஒன்று, இந்தியாவிலிருந்து வருபவை ஆகும்.
இந்தியாவில் 10 பில்லியன் டாலர் அதாவது 74 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்பு கொண்ட ‘டெக்காகார்ன்’ நிறுவனங்கள் மட்டுமே 10 உள்ளன.புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக, கடந்த ஆண்டில் மட்டும் 11 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், 53 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை