பதவிக்கு மேல் பதவி கீதா கோபிநாத் அசத்தல்
வாஷிங்டன்:இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கீதா கோபிநாத், ஐ.எம்.எப்., எனும் பன்னாட்டு நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
தற்போது பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார வல்லுனராக உள்ளார் கீதா கோபிநாத். இவரது மூன்றாண்டு பதவிக்காலம், டிசம்பருடன் முடிவடைய உள்ளது. பதவிக்காலம் முடிந்த பின், ஜனவரியில், ‘ஹாவர்டு’ பல்கலையில் பேராசிரியர் பணிக்கு மீண்டும் திரும்ப இருப்பதாக, அண்மையில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், தற்போது துணை நிர்வாக இயக்குனராக இருக்கும் ஜெப்ரி ஒகமோட்டோவின் பதவிக் காலம் அடுத்த ஆண்டின் துவக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில், கீதா கோபிநாத் அந்த பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
பன்னாட்டு நிதியத்தின் வரலாற்றில், அதன் தலைமை பொருளாதார வல்லுனர் பதவியை ஏற்ற முதல் பெண் கீதா கோபிநாத் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது பன்னாட்டு நிதியத்தின் நிர்வாக இயக்குனராக கிறிஸ்டாலினா ஜார்ஜிவா உள்ளார்.புதிய பொறுப்பை கீதா கோபிநாத் ஏற்பதன் வாயிலாக, இவ்வமைப்பின் மிக உயர்ந்த இரு பதவிகளையும் பெண்களே அலங்கரிக்க உள்ளனர்.