ருத்ர தாண்டவத்தில் கிறிஸ்தவ மத அரசியல் : இயக்குனர் விளக்கம்

தினமலர்  தினமலர்
ருத்ர தாண்டவத்தில் கிறிஸ்தவ மத அரசியல் : இயக்குனர் விளக்கம்

ஜி. எம். பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் மோகன்ஜி தயாரித்து, இயக்கியிருக்கும் திரைப்படம் ருத்ர தாண்டவம். நாடக காதல் தொடர்பான திரௌபதி படத்தை இயக்கி பரபரப்பை கிளப்பியவர் மோகன்ஜி. இந்த படத்தில் நடிகர் ரிஷி ரிச்சர்ட் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை தர்ஷா குப்தா நடித்திருக்கிறார்.

இவர்களுடன் ராதாரவி, கௌதம் வாசுதேவ் மேனன், தம்பி இராமையா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாருக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, ஜுபின் இசையமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதியன்று தியேட்டரில் வெளியாகிறது.

படம் பற்றி மோகன்ஜி கூறியதாவது: திரௌபதி படத்தின் வெற்றிக்குப் பிறகு பிரமாண்டமான பட்ஜெட்டில் படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்தது. திரௌபதி படத்தின் பட்ஜெட் 45 லட்சம். ஆனால் படத்தின் பட்ஜெட்டை விட இருபதிலிருந்து இருபத்தி மூன்று மடங்கு கூடுதலாக வசூலித்தது. இதனால் ஏராளமான வாய்ப்புகள் என்னை தேடி வந்தது. முன்னணி நடிகர்கள் இருவர் கூட நல்ல ஊதியத்தில் படங்கங்களை இயக்க வாய்ப்பு வழங்கினார்கள்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்திலிருந்து திரௌபதி படம் வரை என்னைச் சுற்றி இருப்பவர்களின் கதைகளைத்தான் படமாக இயக்கி இருக்கிறேன். சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை மையப்படுத்தி தான் திரௌபதி திரைப்படத்தை உருவாக்கி இருந்தேன். ருத்ர தாண்டவம் படத்தின் கதையையும் என்னுடைய நண்பரான கிறிஸ்தவ பாதிரியார் ஒருவர் தான் அளித்தார்.

அவர் திரௌபதி படத்தை பார்த்துவிட்டு உங்களுடைய துணிச்சலைப் பாராட்டுகிறேன். நான் ஒரு விஷயத்தை சொல்கிறேன். அதனை படைப்பாக மாற்ற இயலுமா..? என கேட்டு கேட்டு விட்டு ஒரு விஷயத்தைச் சொன்னார், கிறிஸ்தவ மதத்தில் பல உட்பிரிவுகள் இருக்கிறது கிறிஸ்தவ மதத்தை சிலர் கார்ப்பரேட் நிறுவனம் போல் மாற்றியமைத்து இருப்பதையும் எடுத்துரைத்தார்.

மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் என்ற படத்தை பற்றி விரிவாக விவாதித்தார். இதனை திரைப்படமாக உருவாக்கினால், சமூகத்தில் மிகப்பெரிய பேசுபொருளாக உருவாகும் என விவரித்தார். திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய தமிழக கடலோர மாவட்டங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். அத்துடன் மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வும் ஏற்படும் என சொன்னார்.

சிலர் எளிதாக மேடையில் இந்து மதத்தை அழித்து விடுவோம். வேரறுத்து விடுவோம் என பேசுகிறார்கள். அதற்கு கைதட்டல்களும் கிடைக்கிறது. இதன் பின்னணியில் மிகப்பெரிய கார்ப்பரேட் அரசியல் இருப்பதையும், மிகப் பெரிய சதி திட்டம் இருப்பதையும் எடுத்துரைத்தார். இவையெல்லாம் பொதுமக்களுக்கு தெரிவதில்லை. மக்களும் இதில் ஆர்வம் காட்டுவதில்லை. நம்முடன் இருந்து கொண்டே இந்து மதத்தை அழிப்பதற்கான அனைத்து முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனை பாதிரியாருடைய கண்ணோட்டத்திலிருந்து சொல்லும்பொழுது எனக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. நாங்கள் இதுவரை உண்மையான கிறிஸ்தவராக இருந்தோம். தற்போது திடீரென்று ஏராளமானவர்கள் இங்கு வந்து கிறிஸ்தவராகவும் இல்லாமல், இந்துவாகவும் இல்லாமல் எங்களை நோக்கி கேள்வி கேட்கிறார்கள். இதை கேட்டவுடன் இதுதான் என்னுடைய அடுத்த படைப்பு என்று உறுதி எடுத்துக் கொண்டு ருத்ரதாண்டவம் என தலைப்பு வைத்து பணிகளைத் தொடங்கிவிட்டேன். இதுதான் ருத்ரதாண்டவம் உருவான கதை. என்றார்.

மூலக்கதை