பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன?

தினமலர்  தினமலர்
பி.என்.பி.எல்., கடன் வசதி அளிக்கும் பலன்கள் என்ன?

வாடிக்கையாளர்களுக்கான குறுகிய கால கடன் வசதியாக அமையும் பி.என்.பி.எல்., திட்டத்தின் சாதகங்கள், பாதகங்கள் பற்றி ஒரு பார்வை.


பண்டிகை காலம் நெருங்கும் நிலையில், ‘ஆன்லைன்’ நிறுவனங்களின் கவர்ந்திழுக்கும் திட்டங்களுக்கு மத்தியில், பி.என்.பி.எல்., கடன் திட்டமும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. நிதி நுட்ப நிறுவனங்கள் மட்டும் அல்லாமல், ‘இ – -காமர்ஸ்’ நிறுவனங்கள் மற்றும் முன்னணி வங்கிகளும் இந்த கடன் வசதியை அளிக்கத் துவங்கி இருக்கின்றன.ஒரு சில நிறுவனங்கள் இந்த கடன் வசதியோடு, ‘கேஷ்பேக்’ சலுகையையும் அளிக்க முன்வந்துஉள்ளன.


ஏற்கனவே பெருந்தொற்று பாதிப்புக்கு மத்தியில் பலரும் இந்த கடன் வசதியை நாடிய நிலையில், தற்போது இத்திட்டம் மேலும் கவர்ந்திழுப்பதாக அமைகிறது. எனினும் இந்த வசதியை நாடும் முன், இதன் அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்வது அவசியம்.

ஆன்லைன் வசதி


பொருட்களை வாங்கும் போது பணம் கொடுக்காமல், பின்னர் அதற்கான தொகையை செலுத்தும் வசதியே, ‘பை நவ் பே லேட்டர்’ – பி.என்.பி.எல்., என குறிப்பிடப்படுகிறது. ‘கிரெடிட் கார்டு’ இல்லாமல் இணையத்தில் பொருட்களை வாங்க முடியாதவர்கள், ‘ஆன்லைன் ஷாப்பிங்’ செய்ய உதவும் வகையில் இந்த வசதி அறிமுகமானது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் இணையத்தில் பொருட்களை வாங்கிவிட்டு, பின்னர் அதற்கான தொகையை செலுத்தலாம். நிதி நுட்ப நிறுவனங்கள் இந்த வசதியை இ – -காமர்ஸ் தளங்களுடன் இணைந்து வழங்குகின்றன.


இந்த திட்டத்தை எளிதான குறுகிய கால கடன் வசதி போல கருதலாம். குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை செலுத்திவிட்டால், தனியே எந்த கட்டணமும் செலுத்த வேண்டாம். அதற்கு மேல் அவகாசம் தேவைப்பட்டால், மாதத் தவணையாக பணத்தை செலுத்தலாம். தவணை செலுத்தும் காலத்திற்கு உரிய வட்டி வசூலிக்கப்படும். தவணையை செலுத்த தவறினால் அபராதம் செலுத்த வேண்டும். கையில் பணம் இல்லாத போது, உடனடியாக பொருட்களை வாங்க இந்த வசதி ஏற்றதாக இருக்கும். எனினும், குறிப்பிட்ட காலத்திற்கு அந்த தொகையை செலுத்த வேண்டும்.


யாருக்கு ஏற்றது?


பி.என்.பி.எல்., திட்டம் அனைவருக்குமான கடன் வசதியை அளிப்பதாக கருதப்படுகிறது. குறிப்பாக கொரோனா தொற்று பாதிப்பின் போது, பலருக்கு இந்த கடன் வசதி கைகொடுத்தது. தற்போது இ – காமர்ஸ் நிறுவனங்கள், வங்கிகள் இந்த வசதியை அதிகம் முன்னிறுத்துகின்றன. பொருட்களை வாங்க, சேவைகளை பெற எளிய வழி என்றாலும், இந்த வசதியை கவனமாக நாட வேண்டும். முதல் விஷயம், இ- – காமர்ஸ் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் இவற்றில் உள்ள லாபம் காரணமாகவே இவற்றை முன்னிறுத்துகின்றன.


விளம்பரம், மார்க்கெட்டிங், வாடிக்கையாளர் பரப்பு என பலவிதங்களில் அவை பலன் பெறுகின்றன.அதே நேரத்தில், வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட கால அவகாசத்தில் தொகையை செலுத்த முடியாமல், தவணை வசதியை நாடுவதாக இருந்தால், அதற்கான வட்டியை செலுத்த வேண்டும். மேலும், பல நேரங்களில் செயல்முறை கட்டணத்தையும் செலுத்த வேண்டியிருக்கும். தொகையை செலுத்த தவறினால் அபராத கட்டணமும் சேரும். இவை எல்லாம் செலவை அதிகமாக்கும்.


இந்த கட்டணங்கள் சொற்பமாக தோன்றினாலும், நடைமுறையில் அதிக சுமையாகலாம். மேலும், இந்த கடன் வசதி தேவையில்லாத பொருட்களை கூட வாங்கத் துாண்டலாம். எனவே, சேமிப்பு பணத்தில் பொருட்களை வாங்குவதே சரி. தவிர்க்க இயலாமல் இந்த வசதியை நாடும் போது, அதற்கான மொத்த செலவை கணக்கிட்டுப் பார்த்து அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

மூலக்கதை