'அருவா' வேண்டாம் என்றாரா சூர்யா ?

தினமலர்  தினமலர்
அருவா வேண்டாம் என்றாரா சூர்யா ?

ஹரி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடிக்க 'அருவா' என்ற படம் உருவாக உள்ளதாக மார்ச் மாதம் 1ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஸ்டுடியோ க்ரீன் தயாரிக்கும் இந்தப் படம் சூர்யாவின் 39வது படம் எனவும், சூர்யா, ஹரி இணையும் ஆறாவது படம் எனவும் அறிவித்தார்கள்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி இந்த வருடம் தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதுதான் அவர்களது திட்டம். ஆனால், படத்தின் தலைப்பில் ஆரம்பமான சர்ச்சை தொடர்ந்து படத்தைப் பற்றி நெகட்டிவான செய்திகள்தான் அதிகம் வந்து கொண்டிருந்தன.

அப்படத்தின் படப்பிடிப்புகள் கொரோனா தொற்று காரணமாக ஆரம்பமாகவில்லை. அதே சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் 'வாடிவாசல்' என்ற படத்தில் சூர்யா நடிக்க உள்ளதாகவும் மற்றுமொரு அறிவிப்பு வெளியானது. இதனிடையே, ஹரி அவருடைய மைத்துனர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்க உள்ள ஒரு படத்தை இயக்கப் போகிறார் என்ற தகவல் வெளியானது.

இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, 'அருவா' படம் இனி நடக்க வாய்ப்பில்லை என்ற ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 'வாடிவாசல்' படத்திற்கு முன்னதாக பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் சூர்யா நடிக்கப் போகிறார் என்கிறார்கள். சூர்யாவே 'அருவா' படத்தில் நடிக்க விருப்பம் காட்டவில்லை என்றும் ஒரு தகவல். 'அருவா' முற்றிலும் டிராப்பா, அல்லது 'வாடிவாசல்' படத்திற்குப் பிறகு நடைபெறுமா என்பது தயாரிப்பு நிறுவனம் அறிவித்தால் தான் தெரிய வரும்.

மூலக்கதை