சிறு வணிகங்களுக்கு உலக வங்கி நிதியுதவி
புதுடில்லி:கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கும், 15 கோடி சிறு வணிகங்களுக்கு, 5,663 கோடி ரூபாய் நிதியுதவி வழங்க இருப்பதாக உலக வங்கி தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே, கடந்த, 2019 ஜூலை முதல், 2020 ஜூன் வரையிலான காலகட்டத்தில், உலக வங்கி,
இந்தியாவுக்கு, 38 ஆயிரத்து, 732 கோடி ரூபாயை வழங்கி உள்ளது.இது, கடந்த, 10 ஆண்டுகளில் வழங்கப்பட்ட கடனில் அதிக அளவாகும்.இதில், கொரோனா பாதிப்பை எதிர்கொள்வதற்காக, கடந்த மூன்று மாதங்களில் வழங்கப்பட்ட, 20 ஆயிரத்து, 763 கோடி ரூபாயும் அடக்கம்.
உலக வங்கியின், இந்திய இயக்குனர் ஜூனைத்அகமது கூறியிருப்பதாவது:பணப்புழக்கத்தை அதிகரிப்பதன் மூலமும், வங்கி சாராத நிதி நிறுவனங்கள் மற்றும் சிறு நிதி வங்கிகளை
வலுப்படுத்துவதன் மூலமும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை பாதுகாப்பதற்கான
அரசாங்கத்தின் முயற்சிக்கு கைகொடுப்பதற்காக, இந்த நிதி வழங்கப்படுகிறது.
கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களின், நிதி ஆதாரத்தை அதிகரிக்கச் செய்வதற்காக, இந்த அவசர கால நிதியுதவி திட்டத்திற்கு, உலக வங்கியின், நிர்வாக இயக்குனர்கள் குழு ஒப்புதல் தந்துஉள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதற்கு முன்பாக, உலக வங்கி, இந்தியாவின் சமூக மற்றும் ஆரோக்கிய துறைகளுக்கு, தலா ஒரு பில்லியன் டாலர், அதாவது, இந்திய மதிப்பில், 7,550 கோடி ரூபாய் என, மொத்தம்,
15 ஆயிரத்து, 100 கோடி ரூபாயை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.