சிம்பு எனது வாழ்க்கையை வீணடித்து விட்டார்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

தினமலர்  தினமலர்
சிம்பு எனது வாழ்க்கையை வீணடித்து விட்டார்: தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்

சிம்பு நடித்த ஈஸ்வரன் படம் நாளை(ஜன., 14) வெளிவருகிறது. ஆனால் படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சில மாபியாக்கள் சதி செய்கின்றனர் என சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் குற்றம் சாட்டினார். இந்த நிலையில் சிம்பு நடிப்பில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:

அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தயாரிப்பின் போதும், வெளியீட்டின் போதும் என்னென்ன பிரச்சினைகள் ஏற்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அந்த படத்தின் படப்பிடிப்பின்போது எத்தனை நாட்கள் சிம்பு படப்பிடிப்புக்கு வரவில்லை என்பது திரையுலகினருக்குத் தெரியும். 4 கதாபாத்திரம் கொண்ட படத்தில், இரண்டில் மட்டுமே நடித்தார்.

இந்தப் படத்தை அப்படியே வெளியிடுங்கள், இதனைத் தொடர்ந்து இன்னொரு படம் சம்பளமில்லாமல் நடித்துத் தருகிறேன். அது உங்களுடைய நஷ்டத்தை ஈடுகட்டும் என்றார். அதனால் தான் அப்படியே வெளியிட்டோம். எதிர்பார்த்தபடியே படம் ஓடவில்லை. அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தேன். என் பக்கம் நியாயத்தை உணர்ந்து ஒரு படம் நடித்துக் கொடுக்க வேண்டும் அல்லது பணமாக ஈடுகட்ட வேண்டும் என்றார்கள். அப்போது 3 படத்தின் சம்பளத்தில் ஒரு தொகைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டும் என முடிவெடுத்தார்கள்.

சொன்னபடி நடக்கவில்லை என்பதால், க்யூப் நிறுவனத்துக்குக் கடிதமொன்றை அனுப்பியுள்ளது தயாரிப்பாளர் சங்கம். யாருமே படத்தின் வெளியீட்டைத் தடுக்கவில்லை. மாஸ்டர் வெளியாகும் போது இந்தப் படத்தை நிறுத்த வேண்டும் என்று திட்டமெல்லாம் இல்லை.

இதுவரை சங்கங்களை நம்பியே போய்க் கொண்டிருக்கிறேன். இதுவரை நான் தயாரித்த எந்தவொரு படத்தின் கலைஞர்களுக்கும் சம்பளப் பாக்கி வைத்ததில்லை. இந்த ஒரு படத்தைத் தயாரித்துவிட்டு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறேன். அவர்கள் சொன்ன வார்த்தையை நம்பி படத்தை வெளியிட்டேன். எனது வாழ்க்கையை வீணடித்துவிட்டார்கள். 4 ஆண்டுகளாகப் படம் பண்ண முடியாமல் இருக்கிறேன்.

இவ்வாறு மைக்கேல் ராயப்பன் கூறினார்.

மூலக்கதை