புதிய ஒப்பந்த முறை அமல் முதல்தர வீரர்களுக்கு சம்பளம் உயர்வு?: பிசிசிஐ தலைவர் அதிரடி

தமிழ் முரசு  தமிழ் முரசு
புதிய ஒப்பந்த முறை அமல் முதல்தர வீரர்களுக்கு சம்பளம் உயர்வு?: பிசிசிஐ தலைவர் அதிரடி

கொல்கத்தா: பிசிசிஐ சார்பில் தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வீரர்களுக்கு ஏ, பி, சி என மூன்று வகையாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால், முதல்தர உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு இதுபோல் ஒப்பந்தமுறை இல்லாததால், அவர்கள் பணத்தட்டுப்பாட்டால் அவதியுறும் நிலை உள்ளது.

இந்நிலையில், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கொல்கத்தாவில் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளூரில் கிரிக்கெட் வீரர்களுக்கு நிதியாதாரத்தை அதிகரித்து அவர்கள் வாழ்க்கை பாதுகாப்பாக உணரச் செய்வதே எனது முக்கிய நோக்கம். நாட்டின் முதல்நிலை வீரர்களுக்கு இருப்பதை போல், ஆண்டு மத்திய ஒப்பந்தம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கும் செயல்படுத்தப்படும்.



நிதிசார் இணை குழுவிடம் இதுதொடர்பாக கூறி, ஒப்பந்த விதிகளை வகுக்குமாறு கேட்டுள்ளோம். தீபாவளி விடுமுறை முடிந்தவுடன் இதற்கான பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு 2 வாரங்களில் நிறைவேற்றப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். தற்போது உள்ளூர் கிரிக்கெட் வீரர் ஆண்டுக்கு ரூ. 25 லட்சம் வரை ஆட்டங்களுக்கு தகுந்தார்போல் வழங்கப்படுகிறது.

ஆட்ட ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ. 35 ஆயிரம் வரை (தினப்படி நீங்கலாக) தரப்படுகிறது. மேலும் ஒளிபரப்பு உரிமை மூலம் கிடைக்கும் வருவாயில் 13 சதவீதமும் உள்ளூர் வீரர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


.

மூலக்கதை