விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன்

தினமலர்  தினமலர்
விபத்தில் சிக்கி ஓய்வெடுக்கும் மஞ்சிமா மோகன்

மலையாளத்தில் நிவின்பாலி ஜோடியாக ஒரு வடக்கன் செல்பி படத்தில் அறிமுகமானவர் மஞ்சிமா மோகன். தமிழில் கௌதம் மேனன் டைரக்சனில் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்த இவர், தற்போது விஜய்சேதுபதியுடன் துக்ளக் தர்பார், விஷ்ணு விஷால் ஜோடியாக எஃப்ஐஆர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கிய மஞ்சிமா மோகனுக்கு காலில் முறிவு ஏற்பட்டது இதையடுத்து சிறிய அறுவை சிகிச்சையும் அவருக்கு நடைபெற்றுள்ளது. இதுபற்றி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார் மஞ்சிமா மோகன்.

“இதுநாள் வரை நீங்கள் சந்தித்த கடினமான சூழ்நிலை எது என்று பலரும் கேட்டதுண்டு.. அப்போதெல்லாம் அதிர்ஷ்டவசமாக அப்படி எனக்கு எதுவும் நிகழவில்லை என்று சொல்வேன்.. ஆனால் கடந்த சில நாட்களாக அனுபவித்த வலியும் வேதனையும் எனக்கு புதிதான ஒன்று.. அதிலிருந்து என்னுடைய மன வலிமையால் தற்போது மீண்டு வருகிறேன்.. என்னுடைய வேலைகளை (சினிமா) செய்ய முடியவில்லையே என்கிற வருத்தம் மட்டும் நிறையவே இருக்கிறது.. எல்லோரும் வழக்கமாக சொல்லும் கிளிஷே போல தோன்றினாலும், எனக்கு தற்போது இந்த ஓய்வு தேவையாகத்தான் இருக்கிறது” என்று கூறியுள்ளார் மஞ்சிமா மோகன்.

மூலக்கதை