வளர்ச்சி 6.1 சதவீதம் பன்னாட்டு நிதியம் குறைந்தது
வாஷிங்டன்:இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, நடப்பாண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என, குறைத்து கணித்துள்ளது, ஐ.எம்.எப்., எனும், பன்னாட்டு நிதியம்.
கடந்த ஏப்ரல் மாதத்தில், பொருளாதார வளர்ச்சி, 7.3 சதவீதமாக இருக்கும் என்று கணித்து இருந்த நிலையில், தற்போது வளர்ச்சியை, 1.2 சதவீதம் குறைத்து, 6.1 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிட்டுள்ளது. கடந்த, 2018ல், நாட்டின் உண்மையான வளர்ச்சி விகிதம், 6.8 சதவீதம் என்ற நிலையில், 2019ல், 6.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
வட்டி குறைப்பு, கார்ப்பரேட் வரி குறைப்பு, கிராமப்புற நுகர்வுக்கு ஆதரவளிக்கும் அரசு
திட்டங்கள் போன்றவற்றால் வளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும்,
நாட்டின் பொருளாதார வளர்ச்சி, அடுத்த ஆண்டில் ஏற்றம் பெற்று, 7 சதவீதமாக இருக்கும் என்றும் பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
சீனாவை பொருத்தவரை, 2018ல், அந்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 6.6
சதவீதமாக இருந்த நிலையில், நடப்பு ஆண்டில், 6.1 சதவீதமாக இருக்கும் என்றும், அடுத்த ஆண்டில், 5.8 சதவீதமாக மேலும் குறையும் என்றும் பன்னாட்டு நிதியம்தெரிவித்துள்ளது.
இதற்கு முன், கடந்த ஞாயிறு அன்று, உலக வங்கி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6
சதவீதமாக இருக்கும் என்று குறைத்து அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.