பி.வி.சிந்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: மீன் கறி, கீமா சமைத்து தருவேன்... ஐதராபாத்தில் தாய் விஜயா உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பி.வி.சிந்துக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு: மீன் கறி, கீமா சமைத்து தருவேன்... ஐதராபாத்தில் தாய் விஜயா உற்சாகம்

புதுடெல்லி: சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் உலக பேட்மின்டன் போட்டியின் அரையிறுதியில் உலகின் 3ம் நிலை வீராங்கனை சீனாவின் சென் யுபெய்யை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார் இந்தியாவின் பி. வி. சிந்து. இறுதி போட்டியில் அவர் ஜப்பானின் நோசோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார்.

இது, இந்திய ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. காரணம் உலக பேட்மின்டன் தொடரில் ஒரு முறை கூட பதக்கத்தை பி. வி. சிந்து வென்றதில்லை.

போட்டியின் ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய பி. வி. சிந்து, முதல் செட்டில் அற்புதமாக விளையாடினார். எதிரணி வீராங்கனையின் தவறுகளை எல்லாம் தமக்கு சாதகமான பாயிண்ட்டுகளாக மாற்றினார்.

முதல் செட் 21க்கு 7 என்று தம்வசப்படுத்தினார். 2வது செட்டிலும் தமது ஆக்ரோஷத்தையும் விடவில்லை.

அற்புத ஷாட்டுகளை அள்ளி, அதிரடியாக ஆடினார். 21க்கு 7 என்று செட் கணக்கில் அடித்து நொறுக்கி தங்க பதக்கத்தை தட்டிச் சென்றார்.



இதுகுறித்து, சிந்து கூறுைகயில், ‘என் அம்மாவின் பிறந்தநாளில் தங்கம் வென்றுள்ளேன். எனது வெற்றியை என் தாய்க்கு சமர்ப்பிக்கிறேன்.

என் அம்மாவுக்கு எதாவது கிப்ட் கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். இறுதியில் நான் வென்ற தங்கப்பதக்கத்தை அவருக்கு கிப்டாக கொடுத்துள்ளேன்.

நான் இருக்கும் இந்தநிலைக்கு எனது பெற்றோர் தான் காரணம்’’ என்றார். இந்நிலையில், இன்று அதிகாலை 2. 30 மணியளவில் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து டெல்லி வந்தடைந்த பி. வி. சிந்துக்கு, ரசிகர்கள் மற்றுமின்றி விளையாட்டு துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது பி. வி. சிந்து கூறுகையில், ‘‘எனக்கு இது ஒரு சிறந்த தருணம். நான் ஒரு இந்தியர் என்பதில் மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.



முன்னதாக, ஐதராபாத்தில் உள்ள பி. வி. சிந்துவின் தாய் விஜயா தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘‘என் மகளின் வெற்றி, இந்த நாட்டுக்கான வெற்றி. சிறிய குடும்பமான நாங்கள், சிந்துவுக்கு விழா எடுக்கப் போகிறோம்.

மிகுந்து அர்ப்பணிப்புடன் விளையாடுவாள். சிந்து வீட்டிற்கு வரும்போது நான் அவளுக்கு மீன் கறி மற்றும் கீமாவை சமைப்பேன்.

ஏனென்றால் அவை அவளுக்கு பிடித்த உணவுகள்’’ என்றார்.

.

மூலக்கதை