பைனலில் திண்டுக்கல்–சேப்பாக்கம் | ஆகஸ்ட் 13, 2019

தினமலர்  தினமலர்
பைனலில் திண்டுக்கல்–சேப்பாக்கம் | ஆகஸ்ட் 13, 2019

தமிழகத்தில் டி.என்.பி.எல்., ‘டுவென்டி–20’ தொடர் நடக்கிறது. திண்டுக்கல் என்.பி.ஆர் மைதானத்தில் நேற்று நடந்த இரண்டாவது தகுதிச்சுற்று போட்டியில் திண்டுக்கல், மதுரை அணிகள் மோதின. 

திண்டுக்கல் அணியின் அஷ்வின் தொடரிலிருந்து வெளியேறியதால், ஜெதீசன் கேப்டனாக செயல்பட்டார். ‘டாஸ்’ வென்ற திண்டுக்கல் அணி 'பேட்டிங்' தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியின் துவக்க வீரர்கள் ஜெகதீசன் (50), ஹரி நிஷாந்த் (51) அரைசதம் அடித்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய சதுர்வேத் (35), முகமது (32) அதிரடியில் கலக்க, திண்டுக்கல் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 175 ரன்கள் குவித்தது.

கடின இலக்கை விரட்டிய மதுரை அணி தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து தணறியது. துவக்க வீரர் அருண் கார்த்திக் (11) எளிதாக வீழ்ந்தார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சிஜித் சந்திரன் (3), நிலேஷ் சுப்ரமணியன் (12) ஏமாற்றினர். சிறிது நேரம் நிலைத்த மற்றொரு துவக்க வீரர் சரத் ராஜ் (32), மோகன் அபினவ் பந்தில் போல்டானார். சிலம்பரசன் சுழலில் கவுசிக் (40), மிதுன் (0) சிக்கினர். செல்வகுமரன் (11) ரன் அவுட் ஆனார்.

கடைசியில் லோகேஷ் (0) போல்டாக, மதுரை அணி 19.5 ஓவர்களில் 130 ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. திண்டுக்கல் சார்பில் சிலம்பரசன், ரோகித் தலா 3 விக்கெட் வீழ்த்தினர். திண்டுக்கல் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. நாளை சென்னையில் நடக்கும் பைனலில் சேப்பாக்கம் அணியை சந்திக்கிறது.

மூலக்கதை