55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை ரத்து செய்தது அரசு
மும்பை : இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நிதி நிலை அறிக்கைகளை சமர்ப்பிக்காத நிறுவனங்கள் உட்பட, 55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவை நீக்கியுள்ளது, மத்திய அரசு.
ஒரு நிறுவனம், முற்றாக செயல்படாமல் இருந்தாலோ அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மேல், நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாமல் இருந்தாலோ, அந்த நிறுவனத்தின் பதிவு ரத்து செய்யப்படும். இதன்படி, கடந்த ஆண்டு டிசம்பர், 12ம் தேதி வரை, 2 லட்சத்து, 26 ஆயிரத்து, 166 நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டது. தற்போது, இரண்டாம் கட்டமாக, 55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு அதிரடியாக ரத்து செய்யப்பட்டு உள்ளது.
இது குறித்து, மத்திய நிறுவன விவகாரங்கள் துறை இணை அமைச்சர், பி.பி.சவுத்ரி கூறியதாவது: முதற்கட்டமாக பதிவு ரத்து செய்யப்பட்ட, 2.26 லட்சம் நிறுவனங்களில் பல, நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்யாதவை. ஆனால், பெரும்பாலான நிறுவனங்கள் போலி நிறுவனங்கள் ஆகும். இவற்றில், 400க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, ஒரே ஒரு அறை மட்டுமே இருந்தது.
தற்போது இரண்டாம் கட்டமாக, 55 ஆயிரம் நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. நடவடிக்கைகள் மேலும் தொடரும். நிதி முறைகேடு, போதை பொருட்களுக்கு பணம் வழங்குவது, சட்டத்துக்கு புறம்பான வழிகளில் செயல்படுவது போன்றவற்றில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் மீது, அரசு தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது.
‘கார்ப்பரேட்’ என்ற பெயரை தவறாக பயன்படுத்துவதை அரசு அனுமதிக்காது. சட்டத்துக்கு புறம்பாக செயல்படுவதாக தெரிய வந்த சில நிறுவனங்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளோம். அதற்கு, அவை என்ன பதிலளித்துள்ளன என்பதை ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பின், அவற்றின் மீது நிறுவன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.