தரிப்பிட இடத்துக்காக மோதல்! - பேரூந்து சாரதி பலி!!
தரிப்பிட இடத்துக்காக இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை இச்சசம்பவம் இடம்பெற்றுள்ளது.
சனிக்கிழமை இரவு Saint-Pierre-des-Corps ( Centre) பகுதியில் வசிக்கும் பேரூந்து சாரதி ஒருவரே கொல்லப்பட்டுள்ளார். சனிக்கிழமை 18.30 மணி அளவின் தனது மனைவி மற்றும் பிள்ளையுடன் வளாகத்துக்கு வந்துள்ளார். அவரது மகிழுந்தை நிறுத்திவிட்டு, பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் மகிழுந்து அருகே வந்தபோது பிறிதொரு நபருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. தரிப்பிடத்தில் மகிழுந்தை நிறுத்தியதால் இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன் முடிவில் குறித்த நபர் தாக்கப்பட்டுள்ளார் என Tours நகர காவல்துறையினர் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு இலக்கான நபர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார் எனவும், அவர் ஒரு பேரூந்து சாரதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிட இடைவெளியில் தாக்குதல்தாரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.