யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: பைனலில் டெல்போட்ரோவை வீழ்த்தினார்

தினகரன்  தினகரன்
யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது முறையாக ஜோகோவிச் சாம்பியன்: பைனலில் டெல்போட்ரோவை வீழ்த்தினார்

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் 3வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார். பரபரப்பான இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா வீரர் ஜுவன் மார்டின் டெல்போட்ரோவுடன் மோதிய ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இரண்டாவது செட்டில் டெல்போட்ரோ கரும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. எனினும், பதற்றமின்றி விளையாடிய ஜோகோவிச் 7-6 (7-4) என வென்று முன்னிலையை அதிகரித்ததுடன், 3வது செட்டில் அதிரடியாக புள்ளிகளைக் குவித்து 6-3, 7-6 (7-4), 6-3 என்ற நேர் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.ஏற்கனவே 2011 மற்றும் 2015ல் இங்கு சாம்பியன் பட்டம் வென்றிருந்த அவர், 3வது முறையாக யுஎஸ் ஓபன் கோப்பையை முத்தமிட்டார். இது அவர் வென்ற 14வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகும். அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ் சாதனையை (14 பட்டங்கள்) சமன் செய்துள்ள ஜோகோவிச், இந்த வரிசையில் 3வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் (20), ஸ்பெயினின் ரபேல் நடால் (17) முதல் 2 இடங்களில் உள்ளனர். ஜோகோவிச்சுக்கு முதல் பரிசாக 27 கோடி வழங்கப்பட்டது. மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில் டிமியா பாபோஸ் (ஹங்கேரி) - கிரிஸ்டினா மிளாடெனோவிச் (பிரான்ஸ்) ஜோடியுடன் மோதிய ஆஷ்லே பார்தி (ஆஸி.) - கோகோ வாண்டெவெகே (அமெரிக்கா) ஜோடி 3-6, 7-6 (7-2), 7-6 (8-6) என்ற செட் கணக்கில் இரண்டரை மணி நேரம் போராடி வென்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

மூலக்கதை