கச்சா உருக்கு உற்பத்தி: மே மாதத்தில் அதிகரிப்பு
புதுடில்லி:நாட்டின், கச்சா உருக்கு உற்பத்தி, மே மாதத்தில், 5.2 சதவீதம் அதிகரித்துள்ளது. இது குறித்து, உருக்கு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:
மே மாதத்தில், கச்சா உருக்கு உற்பத்தி, 5.2 சதவீதம் அதிகரித்து, 9.24 மில்லியன் டன் ஆக உள்ளது. இதுவே, கடந்த ஆண்டு, மே மாதத்தில், 8.78 மில்லியன் டன் ஆக இருந்தது. நடப்பு நிதியாண்டின், முதல் இரு மாதங்களான, ஏப்ரல் – மே மாதத்தில், 18.02 மில்லியன் டன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.
இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 17.43 மில்லியன் டன், கச்சா உருக்கு உற்பத்தி செய்யப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘பினிஷ்டு ஸ்டீல்’ எனும், வர்த்தகத்துக்கு தயாராக உள்ள உருக்கு உற்பத்தி, ஏப்ரல் – மே மாதங்களில், 21.37 மில்லியன் டன். இதுவே, கடந்த ஆண்டில், இதே காலகட்டத்தில், 21.16 மில்லியன் டன் ஆக இருந்தது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.