‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் சலுகைகள் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் மத்திய அரசு தீவிரம்
புதுடில்லி:வேலைவாய்ப்புகளை
அதிகரிக்கும் நோக்கில், வலைதளம் மூலம் புதுமையான தொழில்களில்
ஈடுபடும், ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்களுக்கு மேலும் பல சலுகைகளை
வழங்க, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
‘பிளிப்கார்ட்,
ஸ்நாப்டீல், ஷாப்க்ளுவ்ஸ், ஓலா, ஊபர்’ போன்ற ஸ்டார்ட் அப் நிறுவனங்களை
துவக்க, ‘ஏஞ்சல் பண்டு’ எனப்படும், துவக்க கால நிதியுதவி
நிறுவனங்கள் உதவுகின்றன. இந்நிறுவனங்கள் மூலம் திரட்டும்
முதலீட்டிற்கு, வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
எனினும்,
ஏஞ்சல் பண்டு முதலீடு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் சந்தை மதிப்பை விட
அதிகம் இருந்தால், அத்தொகைக்கு, 30 சதவீதம் வரி
விதிக்கப்படுகிறது. இதை, ‘ஏஞ்சல் வரி’
என்கின்றனர்.
இந்த வரி, சட்ட விரோத பணப் பரிமாற்றம், வரி ஏய்ப்பு ஆகியவற்றை தடுக்க அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால்,
இந்த வரியால், நேர்மையாக தொழில் செய்வோரும் பாதிக்கப்படுவதாக,
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சார்பில் வருமான வரி துறைக்கு
தெரிவிக்கப்பட்டது.எனவே, ஏஞ்சல் வரி தொடர்பான நடவடிக்கையை, வருமான வரி துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
இதையடுத்து,
தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையான,
டி.பி.ஐ.ஐ.டி., உண்மையான ஸ்டார்ட் அப் நிறுவனம் எது என்பதை, வரையறை
செய்ய உள்ளது.
அதன் அடிப்படையில், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் திரட்டும் முதலீடுகளுக்கு வரி விலக்கு பெற முடியும்.
அடையாளம்
இந்நிலையில்,
ஸ்டார்ட் அப் துறையை மேலும் ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை
அதிகரிப்பதில், மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.இது குறித்து, நிதி துறை வட்டாரம் கூறியதாவது:
மத்திய
அரசு, ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு மேலும் பல சலுகைகளை வழங்க
உள்ளது. இது தொடர்பாக, டி.பி.ஐ.ஐ.டி., மற்றும் வருவாய் துறை
அதிகாரிகளின் ஆலோசனை
கூட்டம் நடைபெற்றது.
அதில், போலி
நிறுவனங்களில் இருந்து, ஸ்டார்ட் அப் நிறுவனங்களை
அடையாளப்படுத்த, அவற்றிடம் முதலீடு குறித்த பிரமாண பத்திரம்
பெறுவது குறித்து, விவாதிக்கப்பட்டது.
அத்தகைய நிறுவனங்கள்
திரட்டும் முதலீடுகள் குறித்து, வருமான வரி துறை கேள்வி கேட்காது.
இதனால், நேர்மையான ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், அவற்றின் முதலீட்டு
விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்கும் நிலை ஏற்படும்.
ஸ்டார்ட்
அப் நிறுவனங்களில், ஏஞ்சல் பண்டு நிறுவனங்கள் செய்யும், 10 கோடி
ரூபாய் வரையிலான முதலீட்டிற்கு, தற்போது, ஏழு ஆண்டுகள் வரி விலக்கு
அளிக்கப்படுகிறது. இதை, 10 ஆண்டுகளாக உயர்த்துவது குறித்தும்,
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
உறவினர்கள்
ஸ்டார்ட் அப்
நிறுவனங்களில், முதலீடுகளை ஊக்குவிக்க, அந்நிறுவனர்களின்
உறவினர்கள், பங்குச் சந்தை பட்டியலில் உள்ள நிறுவனங்கள் ஆகியவை
மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, வரி விலக்கு வழங்குவது குறித்தும்
ஆலோசிக்கப்பட்டது.
ஏஞ்சல் பண்டு நிறுவனங்களுக்கு வழங்குவது
போல, ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்யும், 100 கோடி
ரூபாய்க்கும் அதிகமான விற்றுமுதல் உள்ள நிறுவனங்களுக்கு வரி
சலுகை அளிக்கும் திட்டமும் பரிசீலனையில் உள்ளது.மேலும், வரி
சலுகைக்கான முதலீட்டு வரம்பை, 10 கோடியில் இருந்து, 50 கோடி ரூபாயாக
உயர்த்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தற்போது, ஸ்டார்ட்
அப் நிறுவனங்களுக்கான ஏழு ஆண்டு சலுகை காலத்தில், முதல் மூன்று
ஆண்டுகளுக்கு முழு வரி விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த வரம்பை, 10
ஆண்டுகளாக அதிகரிப்பது குறித்து பரிசீலிக்கப்படுகிறது.வரும்
வாரத்திற்குள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான புதிய சலுகைகள்
குறித்து முடிவு செய்யப்பட்டு, அறிக்கை வெளியாகும் என, தெரிகிறது.
புதிய விதிமுறைகள், ஸ்டார்ட் அப் தொழிலை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகள் உயர வழி வகுக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தணிக்கை
செய்த, ஆண்டு நிதி நிலை அறிக்கை, முதலீடு குறித்த பிரமாண பத்திரம்,
வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை ஆகியவற்றின் அடிப்படையில்,
ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மேற்கொள்ளும், குறிப்பிட்ட சதவீத பங்கு
மூலதனத்திற்கு முழு வரி விலக்கு அளிக்க வேண்டும் என, வருமான வரி
துறையிடம் வலியுறுத்தியுள்ளோம்.
சச்சின் தபாரியா,
நிறுவனர், ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ நிறுவனம்