பரிஸ் - ஒரே வீதியில் வசிக்கும் 450 பேர் வெளியேற்றம்! - எரிவாயு கசிவால் பதட்டம்!!
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் எரிவாயு கசிவினால் இடம்பெற்ற தீ விபத்தைத் தொடர்ந்து, மீண்டும் ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவியுள்ளது.
பரிஸ் ஒன்பதாம் வட்டாரத்தில் rue de Bailleul வீதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் எரிவாயு கசிவு ஏற்பட்டது. நேற்று முன்தினம் புதன்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக 2:25 மணி அளவில் கட்டிடத்தின் ஆறாவது தளத்தில் இந்த எரிவாயு கசிவு ஏற்பட்டது. ஏழடுக்கு கொண்ட இந்த கட்டிடத்தில் எரிவாயு கசிவு ஏற்பட்டதும் உடனடியாக மக்கள் வெளியேற தொடங்கியுள்ளனர். தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ஆனால் அதற்குள்ளாக தொடர்ச்சியாக மக்கள் வெளியேறிக்கொண்டே இருந்தனர். குறித்த வீதியில் உள்ள தேநீர் விடுதி ஒன்றில் இருந்த அனைவரும் கூட வெளியேறினர். சில நிமிடங்களுக்குள்ளாக அங்கிருந்த 450 பேர் அவ்வீதியை விட்டு வெளியேறினர். சம்பவ இடத்தில் இரண்டு தீயணைப்பு படை வீரர்கள் எரிவாயு கட்டுப்படுத்தி, கசிவை நிறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில மணிநேரங்களுக்கு இந்த பரபரப்பு நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.