புரோ கபடி லீக் அரியானாவை வென்றது குஜராத்
விசாகப்பட்டினம்: புரோ கபடி லீக் போட்டியில், அரியானா அணியை 47-37 என்ற புள்ளிக்கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. 12 அணிகள் பங்கேற்று விளையாடி வரும் புரோ கபடி லீக் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நேற்றிரவு நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத், அரியானா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. ஆட்டம் தொடங்கியது முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் போட்டி விறுவிறுப்பாக இருந்தது.
2வது பாதியில் குஜராத் அணியினர் ஆதிக்கம் செலுத்தியதால், அரியானா அணி வீரர்களால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆட்டத்தின் முடிவில், அரியானா அணியை 47-37 என்ற புள்ளிக் கணக்கில் குஜராத் அணி வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இது அந்த அணிக்கு கிடைத்த 14வது வெற்றியாகும்.
‘ஏ’ பிரிவில் குஜராத் அணி 2வது இடம் பிடித்தது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில், பெங்களூரு மற்றும் தெலுங்கு அணிகள் பலப்பரிட்சை நடத்தின.
இந்த போட்டியில் பெங்களூரு அணி வீரர்கள் துடிப்புடன் விளையாடி அணிக்கு வலுசேர்த்தனர். தெலுங்கு அணி வீரர்கள் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை.
ஆட்டநேர முடிவில், பெங்களூரு அணி 37-24 என்ற புள்ளிக்கணக்கில் தெலுங்கு அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் தெலுங்கு, பாட்னா அணிகள் மோதுகின்றன.