பசுமை வாகனத்திற்கு முக்கியத்துவம் தேசிய வாகன கொள்கை வரைவு அறிக்கை வெளியீடு
புதுடில்லி : மத்திய கனரக தொழில் துறை, தேசிய வாகன கொள்கையின் வரைவு அறிக்கையை வெளி யிட்டுள்ளது. பசுமை வாகனங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து தயாரிக்கப்பட்டுள்ள, இந்த வரைவு அறிக்கை குறித்து, பொதுமக்கள் கருத்து கூறலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வரைவு அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:
l வரும், 2023 முதல், மத்திய, மாநில அரசுகளின் வாகன கொள்முதலில், குறைந்தபட்சம், 25 சதவீதம், சுற்றுச்சூழலுக்கு மாசு இல்லாத பசுமை வாகனங்கள் இடம் பெற வேண்டும். இது, 2030ல், 75 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும்
l இதே காலத்தில், மாநகராட்சிகளின் பசுமை வாகன கொள்முதல், முறையே, 50 சதவீதம் மற்றும், 100 சதவீதமாக இருக்க வேண்டும்
l வாகன துறை சார்ந்த பொறியியல் சாதனங்கள், புதிய தொழில்நுட்ப உபகரணங்களை தயாரிக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றின் இறக்குமதி வரி குறைக்கப்பட வேண்டும்
l பசுமை வாகன தயாரிப்பு சார்ந்த தொழில்நுட்ப உதவியை பெறுவதற்கு வசதியாக, தொழில்நுட்ப கொள்முதல் நிதியம் அமைக்க வேண்டும்
l இந்திய வாகன ஏற்றுமதிக்கு, அதிக வாய்ப்புள்ள நாடுகளுடன், வர்த்தக ஒப்பந்தங்கள் மேற்கொள்ள, தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்
l அனைத்து பசுமை வாகனங்களின் மொத்த கொள்முதலுக்கு, மத்திய அரசின், GeM வலைதள சந்தையை பயன்படுத்தலாம்
l பொது போக்குவரத்திற்கான, பசுமை வாகனங்களுக்கு தேவைப்படும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் குறித்து, விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும்
l பசுமை வாகன தயாரிப்பு நிறுவனங்கள், ஒவ்வொரு நிதியாண்டின் துவக்கத்திலும், இறக்குமதி செய்ய உள்ள, மாதிரி வாகனங்களின் எண்ணிக்கையை முன்கூட்டியே தெரிவித்தால் மட்டுமே, சுங்க வரி விலக்கு அளிக்கப்படும்
l பசுமை வாகன துறையில், பணியாளர்களுக்கு திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
l தொழிலாளர் சந்தை தகவல் திட்டத்தை செயல்படுத்தி, தகுதியான தொழிலாளர்களுக்கும், அத்தகையோரை தேடும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கும் இடையே, பாலமாக செயல்படலாம். இதனால், இத்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்
l பசுமை வாகன ஆய்வு மற்றும் மேம்பாட்டு திட்டங்களில், அரசுடன், தனியார் இணைந்து மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, ஊக்கச்சலுகை வழங்கலாம்
l ‘இந்திய முதலீடு’ திட்டத்துடன் இணைந்து, வாகனத் துறையில், குறிப்பிட்ட பிரிவுகளில், அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்
l இந்தியாவில் பசுமை வாகனங்கள் தயாரிப்பு, பயன்பாடு ஆகியவற்றை அதிகரிக்க, ஊக்கச்சலுகைகள், அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
இதற்கு, நீண்ட கால அடிப்படையில், உறுதியான செயல் திட்டங்களை வகுப்பது அவசியம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.