பெண் மரணம்: ரகானேவின் தந்தை கைது
கார் விபத்தில் பெண் மரணம் அடைந்த வழக்கில், இந்திய அணியின் முன்னணி வீரரான அஜிங்யா ரகானேவின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் அஜிங்யா ரகானே. இவர் தற்போது இந்தியா - இலங்கை இடையிலான ஒருநாள் தொடருக்கான அணியில் விளையாடி வருகிறார். இவரது சொந்த ஊர் மும்பையாகும்.
மும்பையில் இவரது குடும்பம் வசித்து வருகிறது. இன்று ‘ஹூண்டாய் I20’ காரில் ரகானேவின் தந்தை மதுகார் பாபுராவ் உள்பட சிலர் சென்று கொண்டிருந்தனர். கார் கோலாபூரில் உள்ள காகல் பஸ் நிலையம் அருகில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென 67 வயதான மூதாட்டி மீது பயங்கரமாக மோதியது. விபத்து ஏற்பட்டதும் அருகில் உள்ளவர்கள் வந்து காரை முற்றுகையிட்டனர். அப்போது காரில் ரகானேவின் அப்பா இருந்தது தெரியவந்தது.
இந்த விபத்தில் அஷாடை காம்பிள் என்ற அந்த மூதாட்டிற்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அந்த பெண்மணி அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்துபோனார்.
இந்த விபத்து குறித்து கோலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மூதாட்டி விபத்தில் இறந்தது தொடர்பான வழக்கில் போலீசார் ரகானேவின் தந்தையைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால், காரை ஓட்டிச் சென்றது யார்? என்ற தகவல் வெளியாகவில்லை.