சிறைச்சாலைக்குள் சாலா அப்தெல்சலாமை பேச வைக்க முயற்சி செய்தேன்! - பயங்கரவாதியின் சகோதரன் தெரிவிப்பு!!
நவம்பர் தாக்குதலில் கைது செய்யப்பட்டு பரிஸ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பயங்கரவாதி சாலா அப்தெல் சலாமின் சகோதரன், 'தாம் அப்தெல்சலாமை சிறைச்சாலையில் பேசவைக்க முயற்சி செய்ததாக தெரிவித்துள்ளார்.
சாலா அதெல்சலாமின் சகோதரன் முகமட் அப்தெல்சலாம் பெல்ஜிய பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே இதனை தெரிவித்துள்ளார். 'மேலதிக விசாரணைகளுக்காக பெல்ஜியம் அழைத்துவரப்படுவதை அவன் விரும்பவில்லை. பரிஸ் சிறையில் அவனை சந்தித்தபோது அவனை பேசவைக்க முயற்சி செய்தேன்.' என குறிப்பிட்டுள்ளார். சாலா அப்தெல்சலாம் பெல்ஜியத்தில் வைத்து கைது செய்யப்படும் போது, சில தகவல்களை விசாரணைகளில் தெரிவித்திருந்தான். ஆனால் அதன் பின்னர் பரிசுக்கு அழைத்துவரப்பட்ட பின்னர் விசாரணைகளில் அமைதி காக்க ஆரம்பித்தான். இதுவரை எவ்வித தகவல்களையும் அவன் வழங்கவில்லை. இந்நிலையில் பெல்ஜிய அதிகாரிகள் அப்தெல்சலாமை விசாரணைகளுக்காக பெல்ஜியத்துக்கு அழைத்திருந்தார்கள். பிரெஞ்சு அரசு அதற்கு அனுமதி அளித்து, டிசம்பர் 18 ஆம் திகதி அழைத்துச் செல்லப்பட உள்ளான் என அறிவித்திருந்த நிலையில், தற்போது அந்த திட்டம் தள்ளிப்போடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின்னரே, சாலா அப்தெல்சலாமின் சகோதரன் பெல்ஜிய பத்திரிகைக்கு பேட்டி வழங்கியிருந்தான். 'அவன் தனது இறுதி காலத்தில் வாழ்வதாக நினைத்துக்கொண்டுள்ளான். அவனுக்கு மதம் மட்டுமே பிரதானமாக உள்ளது!' என முகமட் அப்தெல்சலாம் தெரிவித்துள்ளார். முன்னதாக சாலா அப்தெல்சலாம் கைது செய்யப்படும் போது, இவரும் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.