வணிகர்களின் கோரிக்கையை ஏற்று... ‘டெபிட் கார்டு’ சேவை கட்டணத்தை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை
புதுடில்லி:‘டெபிட்,
கிரெடிட் கார்டு சேவை கட்டணத்தை குறைக்க வேண்டும்’ என, வணிகர்கள்
விடுத்த கோரிக்கை தொடர்பாக, ரிசர்வ் வங்கியுடன், மத்திய அரசு ஆலோசனை
நடத்த உள்ளது.
கடந்த ஆண்டு, பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் போது, நாட்டில் ரொக்கப் புழக்கம் குறைந்தது. இதையடுத்து, மின்னணு பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்க, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டன.அவற்றில்
ஒன்றாக, பொருட்கள் விற்பனையில், ‘டெபிட், கிரெடிட்’ கார்டுகளை
ஏற்கும் வணிகர்களிடம், வங்கிகள் வசூலிக்கும், எம்.டி.ஆர்.,
பரிவர்த்தனை கட்டணம் குறைக்கப்பட்டது.
இதன்படி, 1,000 ரூபாய் வரை, 0.25 சதவீதம்; 2,000 ரூபாய் வரை, 0.50 சதவீதம் என, பரிவர்த்தனை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.இந்நிலையில், ரிசர்வ் வங்கி, சமீபத்தில்,புதிய அறிவிப்பை
வெளியிட்டது.அதில்,
‘கடந்த நிதியாண்டில், 20 லட்சம் ரூபாய் வரை, விற்றுமுதல் கண்ட சிறிய
வணிகர்களுக்கு, ‘பாயின்ட் ஆப் சேல்’ எனப்படும், சாதனம் மூலம், டெபிட்
கார்டு பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான கட்டணம், 0.40 சதவீதம்; இதர
வணிகர்களுக்கு, 0.90 சதவீதம்’ என, தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், பெரிய வணிக நிறுவனங்களுக்கு, 1,000 ரூபாய்க்கு மிகாத, டெபிட் கார்டு பரிவர்த்தனை கட்டணம், 0.5லிருந்து, 0.9 சதவீதமாக உயர்த்தப்பட்டது.இந்த கட்டண உயர்வுக்கு, இந்திய சில்லரை வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
‘பரிவர்த்தனை
கட்டண உயர்வை, நுகர்வோரின் தலையில் தான் சுமத்த நேரிடும் என்பதால்,
உயர்த்தப்பட்ட கட்டணத்தை, மீண்டும், 0.40 சதவீதமாக குறைக்க
வேண்டும்’ என, இச்சங்கம், மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.இது
குறித்து, மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பரிவர்த்தனை
கட்டண விவகாரம் தொடர்பாக, வணிகர்கள் விடுத்துள்ள கோரிக்கை குறித்து,
நிதியமைச்சக அதிகாரிகள், ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை நடத்த
உள்ளனர். இதில், சுமுக தீர்வு காணப்படும் என, தெரிகிறது’ என்றார்.
எம்.டி.ஆர்., என்றால் என்ன?
பொருட்கள்
விற்பனையில், ‘கிரெடிட், டெபிட்’ கார்டுகள் வாயிலான
பரிவர்த்தனைக்கு, வணிகர்களிடம், வங்கிகள் வசூலிக்கும்
கட்டணம், எம்.டி.ஆர்., எனப்படுகிறது.இக்கட்டணத்தை,
வணிகர்களின் கணக்கை பராமரிக்கும் வங்கிகள், நுகர்வோர் கணக்கு
வைத்துள்ள வங்கிகள், கிரெடிட், டெபிட் கார்டுகளை வழங்கும் விசா,
மாஸ்டர் கார்டு உள்ளிட்ட நிறுவனங்கள், பங்கிட்டுக் கொள்கின்றன.
‘பாதிப்பில்லை’
கார்டு பரிவர்த்தனைகள், அதிகளவில், பெரிய வணிக நிறுவனங்களில் தான் நடக்கின்றன.
அதனால், சிறிய நகரங்களில், சிறு வணிகர்கள் அதிகளவில் டெபிட் கார்டுகளை
ஏற்பதற்காக, பரிவர்த்தனை கட்டணங்கள் சீரமைக்கப்பட்டு உள்ளதே தவிர, உயர்த்தப்படவில்லை. வங்கிகளுக்கும், வர்த்தகர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில், கட்டண விகிதம்
நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
பி.பி.கனுங்கா, துணை கவர்னர், ரிசர்வ் வங்கி