பஞ்சின் தரத்தை மேம்படுத்த மில் உரிமையாளர்கள் ஆலோசனை
கோவை : பிற மாநிலங்களில் இருந்து, 64 ஜின்னிங் மில் உரிமையாளர்கள், ‘இந்தியன் டெக்ஸ்பிரனர்ஸ்’ கூட்டமைப்பின் (ஐ.டி.எப்.,) அழைப்பை ஏற்று, கோவை வந்து உள்ளனர்.
ஐ.டி.எப்.,பில் உள்ள, 32 மில்கள் இணைந்து, ‘காட்டன் டீம்’ என்ற குழுவை உருவாக்கி உள்ளனர். இவர்களின் மில்களுக்கு தேவையான பஞ்சை, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, கர்நாடக மாநிலங்களில் உள்ள, 64 ஜின்னிங் மில்களில் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்கின்றனர். அந்த ஜின்னிங் மில்களைச் சேர்ந்தவர்கள், கோவை வந்து, இங்குள்ள ஸ்பின்னிங் மில்களின் செயல்பாடுகளை நேரில் பார்த்து தெரிந்து கொண்டனர். பஞ்சின் தரத்தை மேம்படுத்துவது குறித்தும், ஐ.டி.எப்., அமைப்புடன் ஆலோசனை நடத்தினர்.
கோவை, ‘ரெசிடென்ஸி’ ஓட்டலில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், ஐ.டி.எப்., ஒருங்கிணைப்பாளர், பிரபு தாமோதரன் கூறியதாவது: உலகளவில் இந்திய பருத்தி மிகவும் தரம் வாய்ந்தது. ஆனால், பருத்தி எடுக்கும், சுத்தப்படுத்தும் நடைமுறைகளால், அதன் தரம் குறைகிறது.பருத்தி எடுக்கும்போதும், ஜின்னிங் மில்களுக்கு கொண்டு வரும்போதும், விவசாயிகளின் கவனக்குறைவால், பிற பொருட்கள் அதில் கலந்து விடுகின்றன.
ஜின்னிங் மில்களின் சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளிலும், அவை முற்றிலும் அகற்றப்படுவது இல்லை. இதன் காரணமாக, அனைத்து ஜவுளி மதிப்பு கூட்டும் பொருட்களின் தரமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. எனவே, பஞ்சின் தரத்தை மேம்படுத்துவது குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஜின்னிங் தொழில் நுட்பத்தை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நம் பஞ்சின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம், இந்திய ஜவுளி பொருட்களுக்கு, சர்வதேச சந்தையில் இன்னும் மதிப்பு கூடும்; நம் வர்த்தகமும் மேம்படும்.இவ்வாறு அவர் கூறினார்.