வாகன இறக்குமதியால் ஆபத்து? விசாரணைக்கு டிரம்ப் உத்தரவு
வாஷிங்டன் : வாகனங்கள் இறக்குமதியால், உள்நாட்டு பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து விசாரணை நடத்த, அமெரிக்க அதிபர், டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.
‘‘அமெரிக்காவின் வலிமைக்கு, வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் போன்ற முக்கிய துறைகள் மிகவும் இன்றியமையாதவையாக உள்ளன. ‘‘அதனால், நாட்டின் பாதுகாப்பிற்கு, டிரக் உள்ளிட்ட வாகனங்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் இறக்குமதி அச்சுறுத்தலாக உள்ளதா என்பது குறித்து விசாரிக்க, வர்த்தக துறை அமைச்சர், வில்பர் ராசுக்கு உத்தரவிட்டுள்ளேன்,’’ என, டிரம்ப் தெரிவித்து உள்ளார்.
டிரம்ப், மார்ச்சில், வர்த்தக அமைச்சகத்தின் பரிந்துரைப்படி, உருக்கு, அலுமினியம் மீது, முறையே, 25 சதவீதம் மற்றும் 10 சதவீத வரி விதித்தார். அத்துடன், சீனப் பொருட்கள் இறக்குமதிக்கு, 50 ஆயிரம் கோடி டாலர் வசூலிக்கும் அளவிற்கு வரி விதிக்கப்படும் என, அறிவித்தார். இதற்கு பதிலடியாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, 300 கோடி டாலர் அளவிற்கு வரி விதிக்கப்படும் என, சீனா தெரிவித்தது.
‘உருக்கு, அலுமினியத்திற்கு விதிக்கப்பட்டுள்ள வரி, சர்வதேச வர்த்தக விதிமுறைகளுக்கு எதிரானது’ என, உலக வர்த்தக அமைப்பிடம் இந்தியா முறையிட்டுள்ளது. இந்நிலையில், தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில், உருக்கு, அலுமினியத்தை தொடர்ந்து, வாகனங்கள் இறக்குமதிக்கும் அமெரிக்கா அதிக வரி விதிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, தேசிய பாதுகாப்பு விதிகளை முறைகேடாக, பன்னாட்டு வர்த்தகத்தில் புகுத்துவதாக, அமெரிக்கா மீது குற்றஞ்சாட்டியுள்ளது.
மறுபரிசீலனை:
அமெரிக்காவிற்கு வாகனங்களை ஏற்றுமதி செய்வதில், கனடா, மெக்சிகோ, சீனா, ஜெர்மனி, பிரேசில் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன. கடந்த ஆண்டு, மெக்சிகோ அதிகபட்சமாக, 24 லட்சம்; கனடா, 18 லட்சம் வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளன. இந்த இரு நாடுகளும் தாராள வர்த்தக ஒப்பந்தத்தின் கீழ், வரி விலக்கு பெற்றுள்ளன. இந்த ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய, அமெரிக்கா முடிவு செய்துள்ளது.