பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்க கோல்டுமேன் சாக்ஸ் இலவச கல்வி பயிற்சி
புதுடில்லி : கோல்டுமேன் சாக்ஸ் பவுண்டேஷன் நிறுவனம், கோர்செரா நிறுவனத்துடன் இணைந்து, பெண் தொழில்முனைவோருக்கு, வலைதளம் வாயிலாக இலவச கல்விப் பயிற்சி அளிக்கத் துவங்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த, கோல்டுமேன் சாக்ஸ் குழுமம், நிதிச் சேவைகள் துறையில் செயல்பட்டு வருகிறது. இக்குழுமத்தின் ஓர் அங்கமான, கோல்டுமேன் சாக்ஸ் பவுண்டேஷன், உலகளவில், மக்களின் ஆரோக்கியம், கல்வி ஆகியவற்றை மேம்படுத்தும் சேவைகளில் ஈடுபட்டுள்ளது. இந்நிறுவனம், 2008ல், பெண் தொழில்முனைவோரை முன்னேற்றும் நோக்கில், 'கோல்டுமேன் சாக்ஸ் – 10,000 பெண்கள்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இத்திட்டத்தில், தொழில் புரியும் பெண்களுக்கு, அவர்களின் துறைகளில் மேம்பட்ட முறையில் செயல்படுவதற்கான நிர்வாக பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தந்த துறைகளில், முன்னோடிகளாக உள்ளோரின் வழிகாட்டுதலுடன், நவீன தொழில்நுட்ப விபரங்கள்; சர்வதேச வர்த்தக தொடர்பு; நிதியுதவி பெறுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
இது குறித்து, கோல்டுமேன் சாக்ஸ் பவுண்டேஷன் வெளியிட்டுள்ள அறிக்கை: பெண் தொழில்முனைவோரை மேம்படுத்தும் திட்டத்தில், இதுவரை, 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயன் பெற்றுள்ளனர். 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண் பட்டதாரிகள், அதிக வருவாய் ஈட்டுகின்றனர். இத்திட்டத்தின் மூலம், 60 சதவீதத்திற்கும் அதிகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகி உள்ளன.
தற்போது, வலைதளம் வாயிலான கல்விப் பயிற்சி துவக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சி, அனைவருக்கும் இலவசமாக வழங்கப்படுகிறது. குறைந்தபட்சம், மூன்று தொழிலாளர்களுடன், ஆண்டுக்கு, 50 ஆயிரம் டாலர் வருவாய், அதாவது இந்திய ரூபாயில், 33 லட்சம் ஈட்டுவோருக்கு, பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். இத்திட்டம், பெண் தொழில்முனைவோரின் திறனை மேம்படுத்தி, அவர்களின் வர்த்தக உத்திகளை, செயல்படுத்துவதற்கு களம் அமைத்து கொடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.