எரிபொருளுக்கு கலால் வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசுக்கு தொழில் கூட்டமைப்புகள் கோரிக்கை
புதுடில்லி : ‘எரிபொருளுக்கான கலால் வரியை குறைத்தால், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை, கட்டுக்குள் வரும்’ என, தொழில் கூட்டமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
இது குறித்து, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பின் தலைவர், ராஷேஷ் ஷா கூறியதாவது: கச்சா எண்ணெய் விலை உயர்வால், நாட்டின் பணவீக்கம் அதிகரிக்கும். இந்தியா, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதால், இறக்குமதி செலவினம் உயரும். இதனால், நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்ந்து, ரூபாய் மதிப்பு மேலும் சரியும் அபாயம் உள்ளது.
தொடர் தாக்கங்களால், ரிசர்வ் வங்கி, அதன் நிதிக் கொள்கையில், வட்டி விகிதத்தை உயர்த்தும். இது, தற்போதைய தனியார் முதலீடுகளின் வளர்ச்சியை பாதிக்கும். நாட்டின் பொருளாதாரம், மந்தநிலையில் இருந்து, வளர்ச்சிப் பாதைக்கு திரும்பி வருகிறது. இந்த சூழலில், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அதிக இடர்ப்பாட்டை ஏற்படுத்தும்.
இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காணாவிடில், பொருளாதார வளர்ச்சி தடைபடும். மத்திய அரசு, உடனடியாக பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த வர்த்தகம் மற்றும் தொழிலக அமைப்பான, ‘அசோசெம்’ தலைவர், டி.எஸ்.ராவத் கூறியதாவது: இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக, கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும் உள்ளன. எரிபொருட்களுக்கான கலால் வரியை உடனே குறைக்க வேண்டும். அவ்வாறு குறைத்தாலும், அது, நுகர்வோருக்கு, தற்காலிக தீர்வாகத்தான் இருக்குமே தவிர, நிரந்தர தீர்வாக அமையாது.
மத்திய, மாநில அரசுகள் கலந்தாலோசித்து, பெட்ரோல், டீசலை மீதான, ஜி.எஸ்.டி.,யில் கொண்டு வருவது தான், நிரந்தர தீர்வாக இருக்கும். மேலும், பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி, ஜி.எஸ்.டி., ஆகியவை வாயிலாக கிடைக்கும் பெருமளவு வருவாயை மட்டுமே, இந்தியா நம்பியிருக்க கூடாது. நீண்ட கால அடிப்படையில், எரிபொருள் பாதுகாப்பு தீர்வுகளையும் ஆலோசிக்க வேண்டிய தருணம் இது. வாகன எரிபொருள், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு, 1 லிட்டர் பெட்ரோலுக்கு, 19.58 ரூபாய்; டீசலுக்கு, 15.33 ரூபாய் கலால் வரி விதிக்கிறது. இது தவிர, மாநிலங்கள், ‘வாட்’ வரியும் வசூலிக்கின்றன.
கொஞ்சம் பொறுங்கள்:
கடந்த, 2017 – 18ம் நிதியாண்டில், 7,200 கோடி டாலர் மதிப்பிற்கு, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது, 1 பேரல் கச்சா எண்ணெய் விலை, 80 டாலராக உயர்ந்துள்ளது. இதனால், நடப்பு நிதியாண்டில், கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம், 2,500 – 5,000 கோடி டாலர் வரை அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைப்பது குறித்து, ஆலோசிக்கப்பட்டு வருகிறது. கொஞ்சம் பொறுத்திருங்கள்
-சுபாஷ் சந்திர கார்க், செயலர், மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை