காமன்வெல்த் போட்டியில் கலக்கிய மனிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது : டிடி கூட்டமைப்பு பரிந்துரை

தினகரன்  தினகரன்

புதுடெல்லி: காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில் 4 பதக்கங்களை வென்று சாதனை படைத்த இந்திய வீராங்கனை மனிகா பத்ராவுக்கு அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு பரிந்துரைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டித் தொடரில், இந்திய டேபிள் டென்னிஸ் அணி குழு சாம்பியன்ஷிப் வெல்ல முக்கிய காரணமாக இருந்ததுடன் மகளிர் ஒற்றையர் பிரிவிலும் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மேலும், மவுமா தாஸுடன் இணைந்து மகளிர் இரட்டையர் பிரிவில் வெள்ளி, கலப்பு இரட்டையரில் சத்தியனுடன் இணைந்து வெண்கலப் பதக்கம் பெற்றார். நான்கு பதக்கங்களை வென்று தாய்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள மனிகா பத்ராவுக்கு (22 வயது) மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும் என்று இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று பரிந்துரை செய்துள்ளது. அடுத்து ஸ்வீடனில் ஏப்ரல் 29ம் தேதி தொடங்கும் உலக குழு சாம்பியன்ஷிப்பில்  மனிகா களமிறங்க உள்ளார்.

மூலக்கதை