‘12 முக்கிய சேவை பிரிவுகளை ஊக்குவிக்க மத்திய அரசு முடிவு’
மும்பை : ‘‘நாட்டின் ஏற்றுமதியை மேம்படுத்த, சேவைகள் துறையில், 12 முக்கிய பிரிவுகளை ஊக்குவிக்க, அரசு திட்டமிட்டுள்ளது,’’ என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், சுரேஷ் பிரபு தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: சில மாதங்களாக, நாட்டின் ஏற்றுமதி உயர்ந்து வருகிறது. பாரம்பரிய சரக்குகள் மட்டுமின்றி, புதிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட வேண்டும் என, அரசு விரும்புகிறது. இதையொட்டி, சேவைகள் துறையில், ஊக்குவிப்பு திட்டத்திற்காக, 12 முக்கிய பிரிவுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மத்திய அரசு ஏற்கனவே சேவைகள் துறையைச் சேர்ந்த, சுற்றுலா, ஓட்டல், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட, 12 பிரிவுகள் வளர்ச்சிக்கான, 5,000 கோடி ரூபாய் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு சேவைப் பிரிவும், உள்நாடு மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்தில் வளர்ச்சி காண, நடவடிக்கை எடுக்கப்படும்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு, சேவைகள் துறை, குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகிறது. சேவைகள் துறை, சர்வதேச தரத்தில் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்த வேண்டும்.ரசாயனத் துறை, மிகச் சிறந்த வளர்ச்சி வாய்ப்பை கொண்டுள்ளது. ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்யக் கூடிய ஆற்றல், இத்துறைக்கு உள்ளது. இதுபோல, வளர்ச்சி கண்டு வரும் துறைகளை ஊக்குவித்து, ஏற்றுமதியை அதிகரிக்க, அடுத்த சில மாதங்களில், புதிய தொழில் கொள்கை வெளியிடப்படும்.
வேளாண் ஏற்றுமதி கொள்கையும், பொது கருத்துக்கு வெளியிடப்பட்டுள்ளது. வேளாண் சந்தைகளில் இருந்து விளைப்பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு, சரக்கு விமான கொள்கையை, விமான போக்குவரத்து அமைச்சகம் உருவாக்கி வருகிறது. இத்திட்டத்தில் முதலீடு செய்ய, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை ஆர்வமாக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.