வரும் நாட்களில் பூக்கள் விலை அதிகரிக்கும்
சென்னை : மல்லி வரத்து அதிகரித்துள்ளதால் விலையும் குறைந்து வருகிறது. சென்னையில் கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பூக்கள் சந்தையில், மல்லி வரத்து அதிகரித்துள்ளது.
ஒரு கிலோ மல்லி, 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதில் சீசனின் இறுதிகட்டத்தில் உள்ள ஜாதிமல்லி, 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல், ரோஜா வகைகள் வகைக்கு ஏற்ப, 60 – 100 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதில் நேரம் மற்றும் விற்பனைக்கு ஏற்ப, ஒரு கிலோ ரோஜா, 30 ரூபாய்க்கு கூட விற்பனையாகிறது. வரத்து குறைந்ததால், சாமந்தி ஒரு கிலோ, 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. கனகாம்பரம் வரத்து துவங்கியுள்ளதால், தற்போது 1 கிலோ, 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
இதுகுறித்து, பாரிமுனை பூ வியாபாரிகள் கூறியதாவது: மதுரை, நிலக்கோட்டை, திண்டிவனம், பெரியபாளையம் சுற்றுவட்டாரத்திலிருந்து மல்லி வரத்து அதிகரித்துள்ளது.இதனால், விலை குறைந்து வருகிறது. இருப்பினும் விவசாயத்திற்கான தண்ணீர் பற்றாக்குறையாக இருப்பதால், வரும் காலங்களில் பூக்கள் விலை அதிகரிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.