‘டிஜிட்டல்’ பண பரிவர்த்தனை ரூ.65 லட்சம் கோடியை எட்டும்
புதுடில்லி:‘இந்தியாவில், 2025ல், 65 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, ‘டிஜிட்டல்’ எனப்படும், மின்னணு சார்ந்த பணப் பரிவர்த்தனைகள் நடைபெறும்’ என, ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து, ஏ.சி.ஐ., வேர்ல்டுவைடு நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:இந்தியாவில் தற்போது, 9 கோடி பேர் மின்னணு பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இது, 2020ல், மூன்று மடங்கு அதிகரித்து, 30 கோடியை தாண்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது. 2025ல், ஆண்டுக்கு, 65 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, மின்னணு பணப் பரிவர்த்தனைகள் நடக்கும்.அடுத்த இரு ஆண்டுகளில், ஸ்மார்ட் போன் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, இரு மடங்கு அதிகரித்து, 50 கோடியாக உயரும்.
குறைந்த விலையில் கிடைக்கும் ஸ்மார்ட் போன்கள், இலவச டேட்டா, விரைவான தகவல் பரிமாற்றம் போன்றவற்றால், ஸ்மார்ட் போன் வாயிலான பணப் பரிவர்த்தனைகள் பெருகும்.மின்னணு பணப் பரிவர்த்தனைகளை, நம்பகத்தன்மையுடன் மேற்கொள்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு, நிறுவனங்கள் அதிகம் செலவிட நேரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.