அதிக இழப்பை சந்தித்த பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த, பி.எஸ்.என்.எல்., ஏர் – இந்தியா, எம்.டி.என்.எல்., நிறுவனங்கள், 2016- – 17ம் நிதியாண்டில், பெரும் இழப்பை சந்தித்துள்ளன.அதிக இழப்பை கண்ட, 10 பொதுத் துறை நிறுவனங்களில், இந்த மூன்று நிறுவனங்களின் பங்கு, 55.66 சதவீதமாக உள்ளது.
அதேசமயம், இதே நிதியாண்டில், மொத்தம், 257 பொதுத் துறை நிறுவனங்களின் நிகர லாபம், 11.7 சதவீதம் உயர்ந்து, 1,14,239 கோடி ரூபாயில் இருந்து, 1,27,602 கோடி ரூபாயாக அதிகரித்துஉள்ளது.அதிக லாபமீட்டிய, 10 நிறுவனங்களில், இந்தியன் ஆயில் கார்ப்., ஓ.என்.ஜி.சி., கோல் இந்தியா ஆகியவை, முறையே, 19.69 சதவீதம், 18.45 சதவீதம் மற்றும், 14.94 சதவீத பங்களிப்புடன் முன்னணியில் உள்ளன.
லாபமீட்டிய, 174 நிறுவனங்களில், முதல் ,10 நிறுவனங்களின் பங்கு, 63.57 சதவீதமாக உள்ளது. ஹிந்துஸ்தான் கேபிள், பி.எச்.இ.எல்., ஓ.என்.ஜி.சி., விதேஷ் ஆகியவை, இழப்பில் இருந்து லாப பாதைக்கு திரும்பியுள்ளன.பொதுத் துறையைச் சேர்ந்த, 82 நிறுவனங்களின் மொத்த இழப்பில், 10 நிறுவனங்களின் பங்கு, 83.82 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.