‘நிடி ஆயோக்’ சி.இ.ஓ., குழுக்கள் அமைப்பு; வேலைவாய்ப்பை உருவாக்க ஆலோசனை
புதுடில்லி : வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருவாயை பெருக்குவது, சுலபமாக தொழில் துவங்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை வழங்குவதற்கு, ஆறு குழுக்களை, ‘நிடி ஆயோக்’ அமைத்து உள்ளது. இக்குழுக்களில், சி.இ.ஓ., எனப்படும், பல்வேறு நிறுவனங்களைச் சேர்ந்த, 200 தலைமை செயல் அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர்.
இது குறித்து, நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசின் கொள்கை திட்டங்களை வகுக்கும், ‘நிடி ஆயோக்’ அமைப்பு, ‘புதிய இந்தியா – 2022’ என்ற திட்டத்தின் கீழ், தலைமை செயல் அதிகாரிகளின் குழுக்களை அமைத்துள்ளது. இக்குழுக்கள், தொழில் துறையில் அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை புகுத்துவது, நாளைய நகரங்களை வடிவமைப்பது, தொழில் துவங்குவதை மேலும் சுலபமாக்குவதற்கான பரிந்துரைகளை வழங்கும்.
மேலும், வேலைவாய்ப்புகளை உருவாக்குவது, விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது, வங்கி, காப்பீடு உள்ளிட்ட துறைகளின் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது ஆகியவற்றுக்கான ஆலோசனைகளை, நிடி ஆயோக் அமைப்பிற்கு வழங்கும். அவற்றின் அடிப்படையில், அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.