2 ரூபாய்க்கு 100 எம்.பி.: ‘வை பை டப்பா’ அதிரடி
பெங்களூரு : குறைந்த கட்டணத்தில், தொலை தொடர்பு சேவைகளை வழங்கி வரும், ரிலையன்ஸ் ஜியோவுக்கே, ‘ஆப்பு’ வைப்பது போல், அதிரடியில் இறங்கி இருக்கிறது, பெங்களூரைச் சேர்ந்த ஒரு, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனம்.
சுபீந்த் சர்மா, கரம் லக் ஷம் ஆகியோரால் துவங்கப்பட்டுள்ள, ‘வை பை டப்பா’ எனும் இந்நிறுவனம், 2, 10 மற்றும் 20 ரூபாயில், அதிவேக இன்டர்நெட் சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்நிறுவனம், முதற்கட்டமாக இந்த சேவையை, கர்நாடக மாநிலம், பெங்களூரில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி, 2 ரூபாய்க்கு, 100 எம்.பி.; 10 ரூபாய்க்கு, 500 எம்.பி.; 20 ரூபாய்க்கு, 1 ஜி.பி., டேட்டா வசதியை பெற முடியும். இவற்றை, ஒரு நாள் மட்டுமே பயன்படுத்த முடியும்.
தேநீர் விடுதி மற்றும் பலதரப்பட்ட கடைகளில், ‘வை பை டப்பா’ டோக்கன் விற்கப்படும். இதை வாங்கி, மொபைல் எண்ணை பதிவு செய்து, ஓ.டி.பி., எனப்படும், ஒரு முறை கடவுச்சொல்லை பெற்று, இணைய வசதியை பெறலாம். பெங்களூரு முழுவதும், 350 வழித்தடங்களில், ‘வை பை டப்பா’ பயன்பாட்டிற்கான, ஒருங்கிணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.