யாழ்ப்பாணத்திற்கு செல்ல அஞ்சும் வெளிநாட்டவர்கள்!
வெளிநாடுகளில் உள்ளவர்கள் யாழ்ப்பாணத்திற்கு செல்வதற்கு அஞ்சுவதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த.கணேசநாதன் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் வாள்வெட்டுச் சம்பவங்களால், இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தப் பாதிப்பிற்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின், வித்தியானந்தா கல்லூரி மாணவர்களுக்கு நேற்று கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வடக்கில் வாள்வெட்டு கலாசாரம், கஞ்சா கலாசாரம், போதைப்பொருள் கலாசாரம் என்பன முன்னொருபோதும் இல்லாத வகையில் தலைதூக்கியுள்ளதால் வெளிநாட்டவர்கள் நம்பி வர தயங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வாறான குறுக்கு வழிகளில் மாணவர்கள் ஒருபோதும் செல்லாமல், நற்பிரஜைகளாக உருவாகி தமது இனத்திற்கும் மண்ணுக்கும் பெருமைசேர்க்க வேண்டுமென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கேட்டுக்கொண்டார்.